Thursday, April 30, 2009
இலங்கையை ஆண்ட ராவணனுக்கு இருந்திருக்கலாம் பவர்ஃபுல்லான பத்து தலை! ஆனா..தமிழ் இதயங்களை தன்னைச்சுத்தி சுத்தவைக்கிற ‘சூப்பர் பவர்‘ கொண்டவர்தான் நம்ம ‘ஒத்த ‘தல‘!
வானத்துல வந்து எந்த வால்நட்சத்திரமும் வழிகாட்டலை..ஆனாலும் ஒரு தேவகுமாரனா உதிச்சாரு! தலைக்கு பின்னால எந்த ஒளிவட்டமும் கிடையாது..என்றாலும் தனியா நின்னு முத்திரை பதிச்சாரு! அவர்தான்..அஜித்.மே 1ம் தேதி. உழைப்பாளர் தினம். இந்த நாள்ல பிறந்த அஜித்துக்கு உழைக்கிற வர்க்கத்தின்மேல ‘பிறவிப்பாசம்‘ இயல்பிலேயே இருக்கும்தானே.அந்த பாசத்தை அஜித் சத்தமா சொன்னப்போ..பெரிய யுத்தமே நடந்துச்சு.
அது 1997. தமிழ்சினிமா துறைல திரைப்பட தொழிலாளிகளுக்கும் (ஃபெப்ஸி), படைப்பாளிகளுக்கும் பங்காளி தகராறு நடந்த சமயம். கமலும், அஜித்தும் மட்டுமே ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் குடுத்தாங்க.அதனால படைப்பாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து அஜித்துக்கு ‘ரெட் கார்டு‘ (படங்களில் நடிக்க தடை) போடுற ரேஞ்ச்சுக்கு பாய்ஞ்சு மிரட்டினாங்க.அந்த பரபரப்பான சிச்சுவேஷன்லதான் அஜித்தை நான் முதல்முறையா நேரடியா சந்திச்சேன். அப்போ நான் ‘குங்குமம்‘ பத்திரிகைல சப்எடிட்டர். தி.நகர் சில்வர்பார்க் அபார்ட்மென்ட்ல இருந்த ஆபீஸுக்கு வரச்சொன்னாரு.
அஜித்தின் குரல்வளையை நெரிக்கற அந்த நேரத்துல..அவருக்கு ஆதரவா உழைப்பாளிகளோட குரல் தவிர, அப்போதைய சினிமா புள்ளிகள் ஒரு விரல்கூட நீட்டலை. இதனால கொஞ்சம் டென்ஷனா இருந்தாரு அஜித்.‘‘மனசு திறந்து பேசுங்க சார்! உங்க தரப்பு உண்மைகளை ‘குங்குமம்‘ மூலமா உலகத்துக்கு சொல்லுங்க’’ன்னேன். முதல் சந்திப்பு. ஆனா முழுநம்பிக்கையோட என்கிட்ட கலப்படமில்லாம பேசுனாரு.
அந்த பிரச்னை பத்தி ‘அக்குவேறு சுக்குநூறா‘ பத்திபத்தியா எழுதி..அப்போதைய ‘குங்குமம்‘ தலைமை நிர்வாகியான எங்கள் மதிப்புக்குரிய தயாநிதி மாறன் அவர்களின் (எடிட்டோரியல்ல செல்லமா ‘சின்ன எம்.டி.‘னு சொல்லுவோம்!) பார்வைக்கு வெச்சேன். புயல்வேகத்துல படிச்ச ‘சின்ன எம்.டி.‘ அவர்கள் ‘‘உதய்..அஜித் சொல்ற அத்தனையும் எக்ஸ்க்ளுசிவ்தானே?’’ன்னார். ‘‘சத்தியம் சார்’’னேன். ‘‘அப்படியே கவர்ஸ்டோரிக்கு அனுப்பிடு!’’ன்னார் அதிரடியா.
ஆனா அஜித்தோட பேட்டியை ஆஃப் பண்ணனும்னு சம்பந்தப்பட்ட டாப் படைப்பாளிகள் ‘ஆஃப் தி ரெக்கார்டா’ ஆபீஸுக்கு வந்தெல்லாம் ட்ரை பண்ணாங்க. ஆனா நம்ம ‘சின்ன எம்.டி.‘ அவர்களிடம் இந்த ‘பாச்சா‘ல்லாம் பலிக்கலை. இதுக்கிடையில அஜித்கிட்டயும் சில அல்லக்கைக ‘‘குங்குமத்துல உங்க பேட்டி உங்களுக்கு எதிராவே கான்ட்ரவர்ஸியா வரப்போகுது. உடனே பேட்டிய வாபஸ் வாங்கிடுங்க‘‘னு பத்தவெச்சிருக்காங்க. அஜித்கிட்டேர்ந்து என் பேஜருக்கு மெசேஜ் வந்தது. விஷயத்தை சொல்லி சிரிச்சவர்‘‘நான் உங்களை முழுசா நம்பறேன் சார்!‘‘னு மட்டுமே சொன்னார்.
‘இன்றைய செய்தி நாளைய வரலாறு‘ அல்லவா? ஃபெப்ஸி,படைப்பாளி யுத்தத்துல ஒத்தை ஆளா நின்ன அஜித்துக்கு.. சினிமா உலகில் அவர் ஒரு நல்ல ‘சிட்டிசன்‘ங்கிற ‘முகவரி‘க்கு ‘அசல்‘ ‘வரலாறு‘ அந்த பேட்டி!கவர்ஸ்டோரியை படிச்சுட்டு அஜித் என்கிட்ட சொன்னாரு..‘‘இந்த மாதிரி துணிச்சலா தோள் குடுக்க நாலு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் சார்..நான் நெனச்சத சாதிச்சிருவேன்’’னார். ‘‘இந்த நம்பிக்கைக்கு நன்றி சார்‘‘னேன்.
‘சரி..‘அஜித்தை அழவைத்த எம்.ஜி.ஆர்.‘ பதிவில மிச்சம் வெச்ச ‘தல போல வருமா‘ சம்பவத்தை சொல்லவா? அதுவும் ‘தல‘யோட பர்த்டே கொண்டாட்டம்தான். ‘அ‘ முதல் ‘அக்கு‘ வரை பத்திரிகையாளர்களும், கோழி முதல் கொக்கு வரை படையல்களும், ஜூஸ் முதல் ‘கிக்கு‘ வரை திரவங்களும் ‘இறக்கிகிட்டு‘..அப்புறம் ‘ஏறிகிட்டு‘ ஜாலி கிரிக்கெட்டு ‘ஆடிகிட்டிருந்தாங்க. ‘அப்போ பேச்சும் சிரிப்புமா ‘பேட்ச் பேட்ச்சா‘ நின்னுருந்த நம்மாளுங்களை தேடிவந்து ‘வாய்ழ்த்துய்க்கய்ளை‘ (குளறாம படிங்க) சந்தோசமா வாங்கிட்டிருந்தாரு அல்டிமேட் ஸ்டார். கூடவே திருமதி.ஷாலினியும் வர்றாங்க.
‘‘அச்சச்சோ..சிஸ்டர் வேற வர்றாங்களே‘‘னு எல்லாரோட உள்மனசும் எச்சரிக்க..‘கரீக்ட்டா பேஸ்னுமே‘னு வார்த்தைகளை உச்சரிக்க ட்ரை பண்ணி ட்ரையல் பாத்திட்டிருந்தப்போ..அட! நம்ம பக்கத்துலயே வந்துட்டாங்க அல்டிமேட் தம்பதி. ‘‘தேவகுமாரனும்,தேவதையும் எங்களை தேடிவந்து வாழ்த்தற மாதிரி இருக்கு! எங்க தல இன்னும் உச்சத்துக்கு வர வாழ்த்துக்கள்!’’னு தலய உச்சிகுளிர வாழ்த்தினோம்.அப்போ நம்ம ‘மாப்ள‘ பழைய பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டு ‘‘நீடூழி வாழ்க‘‘னு ஆசீர்வதிக்கறதுக்காக ரெண்டு கையையும் ஒருசேர தூக்க..அவர் வலது கையிலேர்ந்த ‘திரவ குவளை‘ சட்னு வழுக்கி தரையில் ‘ச்சலீர்‘னு உடைஞ்சு சிதற..அத்தனை பேரும் பதறிட்டோம். கீழே விழுந்து தெறிச்ச ஒரு சின்ன கண்ணாடிச் சில்லு ஷாலினியின் கைமீது பட்டுவிட..உடனே அஜித் ‘‘நத்திங்..இட்ஸ் ஓகே‘‘னு சொல்லிகிட்டே அந்த சில்லை கவனமா எடுத்துட்டு..ஒரு பேரரை கூப்பிட்டார்.‘‘உடனே இந்த இடத்தை க்ளீன் பண்ணுங்க‘‘னு சொல்லிட்டு..மாப்ளய பாத்து ‘‘பரவால்ல..கிளாஸ் உங்க கால்ல படாம பத்திரமா வாங்க‘‘னு சொல்லிட்டு அதே ஸ்மைலோட அடுத்த க்ரூப்பை பாக்கப்போனார்.நெஜம்மாவே நெகிழ்ந்து போயிட்டோம் நாங்க.
பாத்தா..மாப்ளைக்கு ‘ஏறினது‘ இறங்கிடிச்சு..எங்களுக்கோ கோபம் ஏறிடுச்சு. உடனே ஒரு ‘உள்நாட்டு போர்‘ மூண்டு..அப்புறம் ‘அயல்நாட்டு நீர்‘‘ தெளிச்சு அடங்குனது தனிக்கதை!