Monday, July 20, 2009
தீபாவை அப்படியொரு ‘சீச்சீ‘ சிச்சுவேஷனில் சந்திப்பேன் என்று
நான் எதிர்பார்க்கவே இல்லை. தேவதை போல இருந்தவள்...வேண்டாம்.
இப்படியாகிவிட்டாளே!
நீலாங்கரையோர ரிசார்ட். ஏ.சி. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்று கடற்கரையோர புல்வெளியில் ஜாலிநடை போட்டேன்.
அப்போது..அலையோர விளையாட்டில் மூன்று ‘ரிச்சான‘ ராஸ்கல்ஸ். நடுவே கிட்டத்தட்ட பாதி ‘ஏவாளாக‘ தீபா. ‘‘ஆ..என்
தீபாவா இவள்?’’.. அதிர்ந்து பார்த்தேன். அவளை விட்டு தள்ளிவந்து என் பக்கத்தில் நின்ற ஒருவன் ‘‘மச்சான்.. அந்த மாடலிங் ஃபிகர் நம்மகூடதான் இருக்கா. பேரு..சோனா. ஈவ்னிங் வந்துருடா’’ என்றான் குஷியான குரலில்.
அவன் சொன்னது..சோனா! இவளோ..தீபா! என் மூளையில்
குண்டூசிகள் குத்தின. செம ஷாக்கோடு அவளை ஷார்ப்பாகப் பார்த்தேன். அவளும் என்னை நேராகப் பார்த்தாள். ‘‘தீபா!‘‘ மனசுக்குள் கத்தினேன் நான். அவளோ காஷுவலாக என்னைப் பார்த்துவிட்டு எனக்கு முதுகு காட்டினாள்.
அடி ராட்சஸி! என்னாச்சுடி உனக்கு? வருஷங்கள் ஓடினால் கேரியர் மாறலாம். கேரக்டர் மாறுமா? 2001..ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..கிரியேட்டிவ் டீமில் நானும், அவளும். காஃபி, கவிதை, யுத்தம், முத்தம், காதல், கலாட்டா என இருவருக்கும் ஒரே டேஸ்ட்..ஒரே அலைவரிசை. விளைவு..டாப் கியரில் எகிறிய நட்பு..எதிர்பார்த்தபடியே ‘காதலாகி கசிந்துருகியது‘!
தீபாவை நான் டீப்பாக லவ் பண்ணியதற்கு இன்னொரு
காரணம்..அவளது கருணை மனசு! அதுவும் அனாதைக் குழந்தைகள் மீது அபார
தாய்ப்பாசம் காட்டியவள். பெரும்பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால்
சம்பாதிப்பதில் பெரும்தொகையை அனாதைப் பிள்ளைகளுக்காக செலவிடுவாள்.
சர்ப்ரைஸாக ஒருநாள் அதிகாலை என் அறைக்கு வந்தாள். ‘என்னடி‘ என்று கேட்பதற்குள்..கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தமிட்டாள். உள்ளுக்குள் ஏறிய உஷ்ணம் உச்சியிலும் ஏற..அப்படியே நானும் அவளை இறுக்கி முத்தமிட்டேன். முன்னழகை பார்த்து திணறியது மூச்சு. முழு அழகு பார்த்து குளறியது பேச்சு. அன்று எனக்கு பர்த் டே. அதுக்கான கிஃப்ட் இது!
ஒருநாள்..வீட்டிற்கு கூட்டிட்டுப் போனாள். எங்கள் காதல் பற்றி ஏற்கனவே வீட்டில் சொல்லியிருப்பாள் போல! எடுத்த எடுப்பிலேயே ஆன்ட்டி (தீப்ஸ் மம்மி) ‘‘நிச்சயமா இது ஒத்துப்போகாது. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னுடுவார். எல்லாத்தையும் மறந்துடுங்க!’’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதன்பிறகு அவளை வீட்டுச்சிறை வைத்துவிட்டார்கள் அவளது பெற்றோர்.
அதே வீட்டிற்குள் என் உயிரையே பணயம் வைத்து நுழைந்து தீபாவை சந்தித்தேன் ஒருநாள்... ‘‘கண்காணாத ஊருக்குப் போயிரலாம். உன்னை
கண்கலங்காமல் நான் காப்பாத்தறேன்..வா தீபா!’’ என்றேன். ‘‘நீயும் நானும் திருட்டுத்தனம் பண்ணலையே! எதுக்காக ஓடிப்போகணும்? என் வீட்டுல பர்மிஷன் வாங்கறேன். கொஞ்சம் பொறுடா!’’ என்றாள் அதீத நம்பிக்கையோடு!
அவ்வளவுதான்..அப்புறம் தீபாவை பெங்களூருக்கு அனுப்பி
விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு அறுந்தது. அது ஒரு காதல் காலம்!
ஆனால்..இதோ..இப்போதோ..இப்படிப் பார்க்கிறேன் இவளை! என்னைக்
கண்டுகொண்டதாகத் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை. பெயரையே மாற்றிக்கொண்டு ‘புதுத்தொழிலில்’ இறங்கிவிட்டவளுக்கு ‘பழைய காதல்‘ குப்பை மேட்டர்தான்!
சம்பவ இடத்திற்கு ‘மீண்டு’ வந்தேன். அன்று நான் கற்பனையில்கூட ஸ்பரிசிக்கத் தயங்கிய அங்கங்களை..இன்று எவனெவனோ தொட்டுத் தடவுகிறான். ‘‘உவ்வே!’’. அவள் காதுபட சத்தமாக காறி உமிழ்ந்தேன். முகம் சுளித்துப் பார்த்த தீபா ச்சே..ச்சே..சோனா சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தபடி வந்தாள். கண்ஜாடையிலேயே என்னை தனியாக வரச்சொன்னாள். ஏதோ ‘மந்திரிச்சு‘ விட்டமாதிரி நானும் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.
‘‘நான் சோனா இல்லை. தீபாதான்! டாடியோட பிசினஸ்ல பயங்கர லாஸ். வீடு, கார்னு எல்லாத்தையும் வித்து தந்தும் கடன்தொல்லை தீரலை. கௌரவமா வாழ்ந்த குடும்பம். கடைசியில சூசைட் பண்ணிக்கற நிலைமைக்கு வந்துருச்சு. வேற வழி? வீட்டுக்கு ஒரே பொண்ணு. நாந்தானே அவங்களை காப்பாத்தியாகணும்?
கை நிறைய சம்பாதிச்சாலும் கடனுக்கும், வாடகைக்குமே சரியாப் போகுது. ஃபிரெண்ட் ஒருத்தி ஐடியா குடுத்தா. தடாலடியா நானும் டிசைட் பண்ணேன். சோனான்னு பேரை மாத்தி மாடலிங்கில் இறங்கினேன். பேருக்குத்தான் மாடலிங். ஆனா பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ் சிலபேருகிட்ட ரெகுலரா ‘கான்டாக்ட்ஸ்‘ இருக்கு. அவங்களோட ‘விளையாட்டுப் பொம்மை‘ நான்!’’.. மூச்சுவிடாமல் தீபா சொன்னதைக்கேட்டு மூச்சு வாங்கியது எனக்கு!
கையிலிருந்த மினரல் வாட்டரை நீட்டி ‘‘குடிக்கிறியாப்பா?’’ என்று அதே கனிவோடு கேட்டாள். வெட்டி வீறாப்போடு ‘‘வேணாம்‘‘ என மறுத்தேன்.
வருத்தமான புன்னகையோடு ஒரு மடக்கு குடித்துவிட்டு தொடர்ந்தாள்..‘‘இப்போ
மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கறேன். நிம்மதியா இருக்கு ஃபேமிலி. என்னை உயிரா மதிச்சு..பாசமா வளர்த்த என் டாடி, மம்மி நல்லா இருக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!’’ என்றாள் அழுகையும், ஆவேசமும் கலந்து தெறிக்க!
அருகில் வந்தவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க..‘ அதிர்ந்துபோய் நின்றேன் நான்! ‘‘‘என் உடம்பை யார்யாரோ தொட்டாலும்..என் மனசை முதல்முதலா தொட்டவன் நீதான்! இப்பவும் என் மனசுக்குள்ள உயிரா ஓடறது..நானும் நீயும் காதலர்களா இருந்த அந்த அற்புதமான நாட்கள்தான்! எனக்காக உன் உயிரையே தர்ற அளவுக்கு துணிஞ்ச உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். செய்வியா..ப்ளீஸ்?’’ என்றாள்.
இன்னமும் என் அடிமனசில் புதைந்து கிடந்த அவள் மீதான
காதல்..அவள் இப்படிக் கேக்க வெடித்து சிதறிவிடும் போலிருந்தது! ‘‘செய்றேம்மா!’’ என்றேன் தீனமான குரலில். ‘‘ப்ளீஸ்..உன் பழைய தீபாவா உனக்கு ஒரு பாச முத்தம் தரவா..ப்ளீஸ்!’’ என்றவள்..அருகே வாசனையாக வந்து என் உதட்டில் ஒரு முத்தத்தை அழுத்தமாக தந்துவிட்டுப் போனாள்!
வாய்விட்டு கதறி அழுதேன்! காரணம்..வாய் வைத்துக் கொடுத்த ‘‘சோனா‘‘வின் முத்தத்தில்..உப்புக் கரித்தது என் தீபாவின் கண்ணீர்!
(பின்குறிப்பு: இது எனது நண்பனின் அனுபவம்!)