எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்!

Friday, December 23, 2011




’’சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்…தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்…இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உருவானவைதான்.

ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

கட்சித்தலைவராக தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றை சொல்லித்தீராது. கட்சியில் சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பேதமே பார்க்க மாட்டார். புதுக்கோட்டைப் பகுதியில் இரண்டு தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டனர். உள்ளூர் பத்திரிகையில் இது சில வரிச் செய்தியாக வெளியானது. இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனதுமே எனக்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். ‘’அவங்க ரெண்டு பேருமே அடையாளம் தெரியாத நபர்கள்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர்.’’அப்படிச் சொல்லாதீங்க. கட்சியிலேர்ந்து யாரையுமே நான் இழக்க விரும்பலை. நீங்க ஊருக்குப் போனதுமே அவங்க ரெண்டு பேரையும் திரும்பவும் கட்சியில சேர்த்துடணும். அந்தச் செய்தி அதே உள்ளூர் பேப்பர்ல வரணும், அதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க’’ என்றார் அழுத்தமாக. அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்தேன். அந்தத் தொண்டர்களுக்கோ பூரிப்பு தாங்கவில்லை. அப்புறம்தான் அவரைப் பார்த்தேன். என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சிரித்த அந்தச் சிரிப்பிருக்கிறதே…அவர்தான் எம்.ஜி.ஆர்.!

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

தகவல்: சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )
எழுத்து: எம்.பி. உதயசூரியன்

நன்றி: புதிய தலைமுறை

’அவன் இவன்’ தெரியுமா?

Saturday, February 19, 2011







’சதக் சதக்’ கரு.பழனியப்பன்

செல்லோ, மெசேஜோ செல்லமாக ‘டேய்’ என்றுதான் அழைப்பான் கரு.பழனியப்பன். பிப்.13ம் தேதி இரவு விஜய் டிவி ‘நீயா நானா’வில் இயக்குநர் கரு.பழனியப்பனைப் பார்த்தேன்.
அப்போதுதான் குளிச்சுட்டு வந்தவன்போல் பளிச்சென்று இருந்தான். என் அன்பு நண்பன். ஆகவேதான் ‘அவன்’. அன்று காதல் பற்றிய விவாதம். எப்போதுமே கரு.பழனியப்பன் பேச்சு ‘சதக் சதக்’ என்று தைக்கும். அன்றும் அப்படித்தான். ‘காதலில் பித்து அதிகம்தான். ஆனால் அதையும் ரசிக்கணும்’ என்றவன் அடுத்து சொன்ன ‘சதக்’...’’மூன்றாம்பிறை’ படத்துல க்ளைமாக்ஸ். ஸ்ரீதேவி ரயிலில் கிளம்பறாங்க. கமல் தன் தலையில குடத்தை வெச்சு, குரங்கு ஜாடை காட்டி, குட்டிக்கரணம் அடிச்சு. விளக்குக் கம்பத்துல முட்டி விழுகறதை பாத்து நாமெல்லாம் கண்கலங்குனோம். ஆனா அது தேவையே இல்லை. ஹீரோயின்
ரயில்லதானே போறா...அதே ரயில்ல ஏறி அடுத்த ஸ்டேஷன்ல அவகிட்ட போய் நடந்ததைச் சொல்லிரலாமே. ஆனா கமல் அப்படி தவிக்கற அந்தப் பித்தைத்தான் நாம ரசிக்கிறோம்’ என்று ’சதக்’க...அரங்கமே கிறங்கி ரசித்தது. பழனி மதுரைக்காரன். 1991ல் பைக் விபத்தில் பழனியப்பன் அடிபட்ட சமயம்...விகடன் மாணவப் பத்திரிகையாளர் தேர்வு நடந்தது. உடம்பில் முக்கால் சதவீத பேண்டேஜ்களோடு முக்காமல் முனகாமல் வீல்சேரில் வந்து தேர்வெழுதி நிருபரான இந்தப் படுபாவியின் அசகாயசூரத்தனத்தை மீனாட்சி அறிவாள்...
கெக்கெக்கே...’மந்திரப்புன்னகை’ நாயகி அல்ல!

’குணா’ச்சித்திர நடிகர்

உணர்வில்...சிவாஜி குழைவு, எம்.ஜி.ஆர்.விளைவு - ரெண்டும் கலந்த ’கவலை’ குணா. உருவத்தில்...கொஞ்சம் ரஜினி, கொஞ்சம் வைரமுத்து- இருவர் கலந்த கலவை இதே குணா. பத்திரிகையாளர். அபாரமான பாடகன். நெருங்கிய நண்பன். ஆகவேதான் ‘இவன்’.பாட ஆரம்பித்தால்...இவன் குரலில் பாகவதர், டி.எம்.எஸ்., நாகூர் அனிபா ஆகியோர் முகம் காட்டி சுகம் ஊட்டுவார்கள். பாசம் வந்தால் மடியிலேறி சாய்வான். ரோஷம் வந்தால்
மாடியிலிருந்தே பாய்வான். (குணாவை வைத்து ஒரு அட்டகாசமான கேரக்டரை பொட்டலம் கட்டி வைத்திருக்கிறேன். அது தனிக்கதை) சுமோ சீறிப்போனாலே எமோஷனலாகிற குணாவை ‘பதினாறு’ படத்தில் கமுக்கமாகக் குமுறும் பெருசு ரோலில் நடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் எஸ்.டி.சபா. யம்மா...சும்மா சொல்லக்கூடாது, கலங்கடித்து விட்டான் குணா! படத்தில் ஒரு நடிகன் அழும்போது, பார்க்கிற ரசிகனும் கண்கசிந்தால் அதுதான் குணச்சித்திர நடிப்பு. ’பதினாறில்’ ஒரு காட்சியில்...மனசுக்குள் பொத்திவைத்த கத்தியாக குத்திக்கிழித்த சோகமும் மானமும் கலந்து வெடிக்க, அக்காவின் காலில் விழுந்து குணா அழும்போது விசும்ப வைத்துவிட்டது ‘குணா’ச்சித்திர நடிப்பு. இனி துணிஞ்சு வேலையை ரிசைன் பண்ணலாம்...பயப்படாத குணா! நீ அல்ல, அந்தணனும், சக்திவேலும் அப்புறமா நானும். ‘கால்ஷீட் மேனேஜர்’ வேலை கைவசம் இருக்கப்பு!

அண்ணனுடையான் படைக்க அஞ்சான்

Saturday, January 22, 2011






பல்லாண்டு கால பொல்லாத சோம்பேறித்தனம் அது. இவ்வாண்டு வீம்பேறி எழுந்து
அதை விரட்டி அடித்துவிட்டேன். சந்தித்ததும், சிந்தித்ததுமாக எத்தனை மனிதர்கள்...எவ்வளவு அனுபவங்கள். பத்திரிகை பரபரப்பில் ஓடிக்கொண்டே இருப்பதால் தனித்திறமை காட்டி படைத்திட நேரமில்லாமல் இருந்தது. நல்லவேளையாக...கொஞ்சகாலத்திற்கு முன் டூவீலருக்குக் குறுக்கே
கறுப்பு நாய் ஒன்று ‘வீல்’ என்று ஓடியது; அந்தர்பல்டி அடித்து நச்சென்று வீழ்ந்து சிவப்பு ரத்தம் சிந்தினான் இந்த பச்சைத்தமிழன் (கலர்ஃபுல் ரைட்டப்பு?). ஒருமாத கால ‘பெருங்காய’ ஒய்வு. என்ன செய்வான் ஒரு ஏழை இளைஞன்?

இஷ்டப்பட்டேன்...சிஸ்டம் தொட்டேன். விறைப்பான, முறைப்பான பலப்பல பிரபலங்களை பேட்டிக்காகவும், நட்புக்காகவும் சந்தித்தபோது ஏற்பட்ட ‘கலகல’ அனுபவங்களை எனது வலைப்பூவில் ‘சுடச்சுட’ பந்தி வைத்தேன். ரசித்து ருசித்த உலகத்தமிழர்கள் உச்சிமோந்து மெச்சினர். அவற்றைத் தொகுத்து ‘சாக்லெட் சந்திப்புகள்’-(பிரபலங்களுடன் ‘கலகல’
அனுபவங்கள்) என்று நூலாக்கினேன். அதேஜோரில் ’திடுக்’கிட வைக்கும் சம்பவங்களைத் தொகுத்து ‘அட!’(வித்தியாச மனிதர்கள் வியப்பான அனுபவங்கள்) என்ற தலைப்பில் இன்னொரு நூல். ரெண்டு நூல்களுக்கும் ’பிள்ளையார் சுழி’ போட்ட ’மாப்பிள்ளை’இரா.த.சக்திவேல் மூலம் ( கோச்சுக்காத மாப்ள, ‘அதை’ சொல்லல!) பாசத்திற்குரிய மீசைக்கார அண்ணன் ’நக்கீரன் கோபால்’அவர்களது பார்வைக்குப் போனது. வாயாரப் படித்து வாய்விட்டுச் சிரித்த அண்ணன் ரெண்டு புத்தகங்களையும்
’நக்கீரன் வெளியீடுகளாக’வெளியிடச் சொன்னார்.

‘ப்ரூஃப்’பார்ப்பதிலிருந்து ஃபுல்ஸ்டாப்’ போடுவதுவரை ’புல்லட் ப்ரூஃப்’ போடும் அளவிற்கு தோட்டா ஸ்பீடில் கேட்டு ‘அச்சா’ என்று பாராட்டும்படி நூலை அச்சாக்கத் துணையிருந்த ’நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்’ சகோதரர் பரமேஷ்வரனுக்கு நன்றி சொல்லித்தீராது. இதேவேளையில் இரா.த.சக்திவேல் எழுதிய ‘ச்சீய்’ கவிதைகள்,
‘பாலாவின் படைப்புலகம்’,‘புலிகேசியான புண்ணாக்கு’மற்றும் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய ‘பாரதிராஜா முதல் சசிகுமார் வரை’நூல்களும் ரெடியாக இருக்க...இவற்றோடு எனது இரு நூல்களும் அணிவகுக்க...சகாக்களோடு சேர்ந்து
ஆரம்பமானது ஒரு புதிய சகாப்தம். படைப்புலகத்திற்கு இந்த அணி ஆற்றிய தொண்டால், மூவரது ஃபோட்டோக்களையும் போட்டு புத்தகக்காட்சியில் ரெண்டாள் உசரத்திற்கு பேனர் வைத்து அசரடித்ததைக் கண்டு தமிழ்க்கன்னி பெருமகிழ்ச்சி கொண்டாள்.

அந்த பேனரை அன்புத்தம்பி அறிவழகன் ஃபோட்டோ எடுத்துத் தந்தான். அட்டகாசமாக இருந்த பேனரில் எனது ‘அட’ புத்தகத்தின் அட்டையை ஜூம் செய்து பார்த்தபோது வாடிப்போனேன். காரணம்-மண்ணு மணக்கிற சம்பவங்களும், மனிதர்களும் அடங்கிய அப்புத்தகத்தின் அட்டையில், இரு வெளிநாட்டு முகங்கள் அலங்கரித்தன. ‘அய்யோ மாப்ள, அட்டை நல்லா இருக்கு, ஆனா சப்ஜெக்ட்டுக்கு பொருத்தமா இல்லியே’என்று அலறியடித்து சக்தியிடம் சொன்னேன். கிளறிக் கிளறி அவர் விசாரிக்க கிட்டத்தட்ட கண்ணீர் சொட்டிவிட்டேன். ‘சரி, அண்ணன்கிட்ட பேசறேன்’ என்று சக்தி சொன்ன அதேநேரம்...நக்கீரன் கோபால் அண்ணன் புத்தகக் காட்சி விழாவில் இருந்தார்.

வாடிப்போன முகமும், வதங்கிப்போன மனசுமாக உதடு பிதுங்கிபோய் நானிருக்க...’பாஞ்சு நிமிஷத்தில்’சக்தி பாஞ்சு வந்தார் செல்லில். “உதயா, அண்ணன்கிட்ட சொன்னேன். அண்ணனும் பேனரைப் பாத்து அப்படியேதான் ஃபீல் பண்ணியிருக்கார். ‘புத்தகம் அந்த அட்டையோட ஸ்டாலுக்கு போகாது. புது அட்டை பிரிண்ட் பண்ணிரலாம். தம்பியை கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க’ என்ற ’அண்ணனின் குரலை’ அப்படியே சக்தி ஒலிக்க , ஏற்கனவே கசிந்த கண்ணீர் நக்கீரன் கோபால் அண்ணனின் மின்னல்வேக ஆக்‌ஷனால் இப்போது ஆனந்தக்கண்ணீராக வழிந்தது.


நம்புங்கள் நண்பர்களே, அடுத்து நடந்தது ‘அண்ணனுக்கே உரிய அதிரடி அதிசயம்’. பழைய அட்டைக்கு மாற்றாக கைவசம் தயாராக இருந்த மூன்று அட்டைப்பட டிசைன்களை பரமேஷ்வரனுக்கு அனுப்பி வைத்தேன். பட்டை கிளப்பும் பத்திரிகை, பப்ளிகேஷன் பரபரப்புகளுக்கு நடுவே ’ஒரு அட்டை மேட்டர்தானே’ என அண்ணன் சட்டை செய்யாமல்
விட்டிருக்கலாம்தான்...ஆனால் ‘அட்டைப்பட சக்கரவர்த்தி’ அவர் என்பதால், இந்த ‘அட’ அட்டையிலும் அபார அக்கறை காட்டி, அட்டகாசமான அட்டைப்படம் ஒன்றை தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பியிருக்கிறார். முதல்நாள் மதியம் அனுப்பிய அட்டை அச்சாகி, புத்தகத்துடன் பைண்டிங் ஆகி மறுநாள் மதியமே புத்தகக் காட்சியில் ’நக்கீரன் ஸ்டாலில்’
இடம்பிடித்தது என்றால், ’படைப்புகள்மீது காட்டும் அக்கறையில் அவருக்கு நிகர் அவரே’ என்பதுதான் அண்ணனுக்கான பெரும்புகழ். ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’- இது அண்ணனுக்கான பொன்மொழி. ‘அண்ணனுடையான் (புத்தகம்) படைக்க அஞ்சான்’- இது அண்ணனுக்கான என்மொழி.

ஜனவரி 13ம் தேதி. மாலை 4 மணி. சென்னை புத்தகக்காட்சி ‘நக்கீரன் ஸ்டால்’. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட நூல்களின் ஆசிரியர்களுக்கு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் பொன்னாடை போர்த்தி, படைப்புக்கான காசோலை வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி. தீட்டி வைத்த ஈட்டி போல உடற்கட்டும், போர்வாளாக மிரட்டும் மீசையும், வாயாரச் சிரிப்புமாக
நின்றிருந்தார் அண்ணன். அத்தனை படைப்பாளிகளையும் அன்போடு வரவேற்றார். ‘தம்பி உதயா’ என்று பாசத்தோடு அழைத்த அண்ணனின் வெற்றிக்கரங்களை அன்போடு பற்றி முத்தமிட்டு வணங்கினேன். ‘சாக்லெட் சந்திப்புகள்’ நூல் பற்றி இனிப்பாகப் பாராட்டி ஒரு குழந்தையைப் போல் ரசித்துச் சிரித்தார். சாதனை இயக்குநர் மகேந்திரன் தொடங்கி இரா.த.சக்திவேல்,ஆர்.எஸ்.அந்தணன் என எங்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, காசோலையும், அன்பளிப்பும் வழங்கி கௌரவித்தார் அண்ணன். ஆகமொத்தம்...அங்கு கிடைத்த அண்ணனின் பாராட்டு மூலம் தமிழ்ப்படைப்புலகை அங்குலம் அளவாவது தரம்
உயர்த்துவதே நக்கீரன் பதிப்பகத்திற்கு படைப்பாளர்கள் செய்யும் பெருமை; கடமை!

 
சுடச்சுட - by Templates para novo blogger