வெள்ளிநுரை விளையாடற அலையோரமா நின்னா.. நாம ‘மீனவ நண்பன்‘! கொஞ்சம் தள்ளி உழைப்பாளர் சிலையோரமா நின்னா..நாம ‘உழைப்பாளி’!
ரிப்போர்ட்டர்ங்கறதால..‘போர்ட்டர்‘ முதல் ஓட்டுநர் வரை எல்லாருமே நமக்கு நல்ல
தோஸ்த்துகதான்!
‘அம்மா மெஸ்‘ எதிரே..ஆட்டோக்காக நிக்கறேன். ‘முந்தி வர்ற இந்த மூணு சக்கர தேரெல்லாம்‘ நாலுசக்கர வாகன ரேஞ்சுக்கு ரேட் கேக்க..அஞ்சி நின்னேன். அப்போ பாத்து வந்த ஒரு ‘ஆட்டோபாந்தவன்‘..‘‘தலைவா! எப்டி க்றீங்க? ஏறி குந்துங்க. வீட்டாண்ட இட்டர்றேன்!‘‘னு பாசமா சொல்ல..‘அட..நம்மாளு‘னு ‘ஆட்டோமேட்டிக்கா‘ ஏறி உக்காந்தேன்.
அந்த ஆட்டோ டிரைவர்..மணிகண்டன். பார்வைக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும்..‘தார் பூசின தங்கக்கட்டி‘! சூப்பர் ஸ்டார் ரஜினியே இவரை கூப்பிட்டு பாராட்டியிருக்காரு! ‘நிஜ பாட்ஷா‘வை ‘சூப்பர் பாட்ஷா‘ மெச்சினதுக்கு காரணம்?
‘ஆறறிவு எந்திரன்கள்‘ பரபரப்பா ஓடிகிட்டிருக்கற சென்னை
மாநகரம்! ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிற இந்த நகரத்துல..ஆனந்தக்கண்ணீர் வழியவைக்கிற சம்பவம் அபூர்வமா நிகழும். அப்படி ஒரு சம்பவம்..சில வருஷங்களுக்குமுன்னால சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு முன்னால நடந்துருக்கு!
தி.நகர் பஸ் ஸ்டாண்ட். மனிதாபிமானத்தை ‘பான்பராக்கு‘ போல மென்னு துப்பற மனுஷங்களை பராக்கு பாத்தபடியே நின்னுகிட்டிருக்காங்க பதிமூணு வயசு சிறுமிகள் ரெண்டுபேர். ‘எப்படியாவது ரஜினி அங்கிளை நேர்ல பாத்துடணும்’ங்கற ஆசையில அன்னை, தந்தைக்குத் தெரியாம சேலத்துலேர்ந்து சென்னைக்கு பஸ் ஏறி
வந்துட்டாங்க.
அசட்டுத்துணிச்சல்ல அசலூருக்கு வந்தாச்சு. ஆனா ‘ரஜினி வீட்டுக்கு எப்படி போறது?’ வழிதெரியாம முழி பிதுங்கி நிக்கறாங்க. வழக்கம்போல வழியில வந்த ஒரு ஆட்டோ டிரைவர் இந்த சிறுமிகள்கிட்ட நைஸா பேச்சு குடுக்கறாரு. வெள்ளை மனசுப் பிள்ளைகள் ரெண்டு பேரும் விஷயத்தை சொல்லிட்டாங்க!
‘‘அடடே! நானும் ரசிகன்தாம்மா! உங்க ரெண்டுபேரையும் ரஜினி அங்கிள் வீட்டுக்கே கூட்டிட்டுப்போறேன் வாம்மா!’’னு ஆட்டோக்காரர் சொல்ல.. ‘‘சரிங்க அங்கிள்’’னு அப்பாவிப்பிள்ளைகளும் ஆட்டோல ஏறிக்கொள்ள..சீறிக்கிளம்பிச்சு ஆட்டோ! சுத்திமுத்தி நின்ன லோக்கல் ஆசாமிகளும் ‘கலி முத்திப்போச்சுமா‘னு கிலியை கிளப்பிட்டாங்க!
பாசமுள்ள வாசகர்களே! இனிமேல் நீங்க படிக்கப்
போகும் சம்பவம்..ப்ச்! என்னத்த சொல்ல? வேண்டாம்..தொடர்ந்து படிங்க!
‘விருட்‘னு வந்து நிக்கற ஆட்டோலேர்ந்து ரெண்டு சின்னப்பிள்ளைக செம குஷியோட ஓடிவர்றாங்க! இதைப்பாத்து குழம்பிப் போனாங்க போயஸ் கார்டன்ல இருக்கற ரஜினி வீட்டு செக்யூரிட்டிகள்! தொடர்ந்து ஆட்டோ டிரைவரும் ஆசையா வந்து ‘பாவம்..சின்னப்புள்ளைக ஆசைப்பட்டுச்சு! அதான் கூட்டி வந்தேன்‘‘னு ‘கைப்புள்ளத்தனமா‘ சொல்றாரு.
நொந்துபோன செக்யூரிட்டிகள் ஆட்டோ டிரைவர்கிட்ட ‘‘ஏப்பா.. அந்த புள்ளைகளுக்கு வெவரம் பத்தாது. ஆனா உனக்கோ வெவரமே கெடையாது‘‘னு திட்டிமுடிச்சாங்க. வந்த ‘ரெட்டைவால்களோ’ ‘‘ரஜினி அங்கிளை பாக்காம போக
மாட்டோம்’’னு அழுது அடம்புடிக்க..‘‘சார் படம் புடிக்க போயிருக்காருமா‘‘னு பதில்
சொல்லியும் ‘புள்ளப்பூச்சியா‘ குடைஞ்சிருக்குக புள்ளைங்க!
ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி ‘ரஜினி ஃபோட்டோ‘ல்லாம் தந்து பிள்ளைகளை சமாதானப்படுத்தி ‘ஆத்தாடி‘ன்னு பெருமூச்சு விடறதுக்குள்ள..அடுத்த பிரச்னை வந்துருச்சு! ‘இந்த வாண்டுகளை ஊருக்கு திருப்பி அனுப்பறது எப்படி?‘னு பதறுறாங்க செக்யூரிட்டிக! அந்த ஆட்டோக்காரரோ ‘‘பத்திரமா நான் அனுப்பி வெக்கிறேங்க!‘‘னு அக்கறையா சொல்றாரு.
‘‘தம்பி..உன்னை நம்பி எப்படிப்பா அனுப்பறது?’’னு செக்யூரிட்டிகள் மறுக்க..‘‘தலைவர் மேல சத்தியமா நான் பத்திரமா அனுப்பிச்சிடறேங்க!‘‘னு ஆட்டோக்காரர் கெஞ்ச..‘போயஸ் கார்டன்ல பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம்
மாதிரி‘ ஒரு ‘பாசப்போராட்டமே‘ நடக்குது. இதுக்கு நடுவே அந்த பிள்ளைககிட்ட ஒரு செக்யூரிட்டி நைஸா அட்ரஸை விசாரிக்கறாரு.
‘கிளிப்பிள்ளையா‘ பிள்ளைகள் வீட்டு அட்ரஸை ஒப்பிக்க..‘அடப்
பாவிப்பய புள்ளைகளா‘‘னு ஒரு செக்யூரிட்டி சந்தோஷத்துல அணில்பிள்ளையா குதிக்கறாரு. ஏன்னா..அதுல ஒரு புள்ளை அவரோட பொண்டாட்டி வகையறாவுல சொந்தக்காரரோட மகள்! அப்புறமென்ன..அந்த சொந்தகாரருக்கு தகவல் சொல்றாங்க. அங்கேதான்
க்ளைமாக்ஸே!
‘‘ஆமாமுங்க! முட்டாயை தின்னுகிட்டுத் திரிஞ்ச ரெண்டு
முட்டாப்பய புள்ளைகளும் ரஜினியை பாக்கணும்னு மெட்ராஸ்க்கு ஓடிவந்துருக்குன்னு
ஆட்டோக்காரத் தம்பி மணிகண்டன்ங்கறவர் ஃபோன் பண்ணி சொல்லிட்டாருங்க! அதான் அவங்க தாய்மாமன் கௌம்பி வந்துகிட்டிருக்காருங்க!’’னு ஒரு பிள்ளையோட அப்பா
சொல்ல..நம்ம ஆட்டோ மணியோட அக்கறையை பாத்து கண்கலங்கிட்டாங்க செக்யூரிட்டிகள்!
இந்த தகவல் நம்ம காதுக்கு வர..ஆட்டோ மணியை பிடிச்சு
‘அன்புள்ள் ரஜினிகாந்த்!‘னு ஒரு ஃபோட்டோ ஸ்டோரி ‘குங்குமம்‘ இதழில் எழுதினேன். அந்த கட்டுரைல ஃபைனல் டச்சா ‘இந்த சென்னைக்கு ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ என்று ஆசையோடு ஓடிவந்த அப்பாவி சிறுமிகளை பத்திரமாகப் பாதுகாத்த ‘பாட்ஷா‘ மணிகண்டனுக்கும், அவர்களை பொறுப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்த ‘ஊர்க்காவலன்‘ செக்யூரிட்டிகளுக்கும் கோடி கங்க்ராட்ஸ்!’’னு எழுதியிருந்தேன்.
கட்டுரை சூப்பர் ஸ்டாரின் பார்வைக்கு போனது. ஆட்டோ மணியின் வீடு தேடி ‘மனிதன்‘ அழைப்பு வந்தது. ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து
கால்தொட்ட மணியை ரஜினி தோள்தொட்டு பிடிச்சு ‘‘நீதான் நிஜ ரஜினி!‘‘னு கண்கசிய
பாராட்ட..கதறி அழுத மணிக்கு ‘அப்போது வழிஞ்ச கண்ணீர் அவ்வளவு இனிப்பா இருந்துச்சாம்!’