உல்லாசமாக இருக்கலாம் வா!

Saturday, August 29, 2009


உலக மொழிகள் லட்சக்கணக்குல இருக்கு. வம்பு கிம்புன்னு வந்துட்டா...காதுகள்ல ‘பன்றி’ புகுந்த மாதிரி நம்மாளுங்க ’காச்சற’ ‘கலக மொழிகளும்’ எக்கச்சக்கமா இருக்கு. ஆனா பத்திரிகைகளுக்குன்னே நம்மள மாதிரி ஆளுங்க ‘மாங்கு மாங்கு’ன்னு ஒரு லாங்குவேஜ் எழுதறாங்களே! அந்த மொழி பத்தி தெரியுமா?

தெரியும்...ஆனா தெரியாதுன்னு நஃழுவாதீங்க. காலை, மாலை பேப்பர் எதுவானாலும் காலை ஆட்டிகிட்டே காபியை குடிச்சுகிட்டு பேப்பரை படிச்சுகிட்டிருக்கற ஆளுங்கதானே நாம! இப்போ நான் சொல்லப்போற இந்த நியூஸை எல்லா பேப்பர்லயும் நீங்க தினந்தோறும் படிச்சிருப்பீங்க...படிக்கிறீங்க...படிப்பீங்க!

‘அழகிகள் கைது’ன்னு தலைப்பு இருக்கும். அப்படியே படிச்சிட்டு போனீங்கன்னா...மூணாவது பாராவுல ‘’சூளைமேடு பஸ் ஸ்டாண்டு ஓரமாக நின்றிருந்த இந்த அழகிகள் மூவரும் அந்த வழியே சென்ற ஆண்களை மறித்து ‘உல்லாசமாக இருக்கலாம் வா’ என்று சிரித்து அழைத்திருக்கிறார்கள். அதிர்ந்துபோன அந்தப் பகுதி ஆண்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர...அந்த மூன்று விபசார அழகிகளும் கைது செய்யப்பட்டனர்’னு நியூஸ் ஓடும்.

இதைப் படிச்சதுமே எனக்கு ’கொல்’லுன்னு சிரிப்பு பொத்துக்கும். ‘என்னா லொள்ளு’ன்னு திட்டாதீங்க. ’கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்த தொழில்களில்’ விபசாரமும் ஒண்ணு. இது தெரியலேன்னா நாமெல்லாம் மண்ணு. அந்த ‘தகாத செயலில்’ ஈடுபடும் பெண்கள்மீது நடவடிக்கை எடுக்கறதெல்லாம் சரிதான்.

இப்படியொரு ‘இருட்டுத் தொழிலில்’ இருக்கும் மாது, கடந்து போகிற சாதுவான ஆண்களை வழிமறிக்கக்கூட போதுமான சான்ஸ் இரு க்கலாம். ஆனால் அப்பேர்ப்பட்ட ஆம்பளைகளிடம் ‘உல்லாசமாக இருக்கலாம் வா’ன்னு சல்லாபத் தமிழில் கூப்பிட்டால்...அழைக்கப்பட்டவன் அந்த இடத்திலேயே ‘பொல்லாத பெண்ணடி நீ’ன்னு ‘கும்மியடிச்சு சிரிச்சே..விம்மி வெடிச்சு செத்துப் போயிர மாட்டானா’?

இதைவிட வங்கொடுமை..’அழகி’ன்னு பட்டம் சூட்டி பேப்பர்ல வந்த தங்களோட ஃபோட்டோக்களை பாத்து ’தங்கர்பச்சான் அழகி’ மாதிரி அந்த ‘ஒல்லிப்பிச்சான்’ பெண்கள் சிரிச்சுகிட்டே அழுகறதுதான்.
சரி...இந்த ‘அழகி’யாகப்பட்டவங்க இதேமாதிரி ‘உல்லாசமாக இருக்கலாம் வா’ன்னு யாரையாச்சும் அழைக்கிறாங்களா? மூச்சு விடாம வாட்ச் பண்ணிப் பாத்து ஒரு கட்டுரையா எழுதிரலாம்னு நானும், நண்பர்களும் கிளம்பினோம். சென்னையின் பிஸியான ஒரு வர்த்தக ஏரியாவில் ‘வாரியா’ன்னு அந்த ‘வித்தகப் பெண்கள்’ நிக்கிறது வழக்கம். விட்டோம் வண்டியை.

மாலை 6 மணி. ‘உஸ்’னு பெருமூச்சு விடற ஆபீஸ் பெருசுகளும், ‘கிஸ்’ அடிக்கிற நெருக்கத்தில் உரசிப் பேசற காலேஜ் இளசுகளுமா நிரம்பியிருந்தது அந்த பஸ் ஸ்டாண்ட். சொல்லிவெச்ச மாதிரி சீரான கேப்ல தள்ளித்தள்ளி ஜோரா நின்னுருந்தாங்க மூணு ‘அழகிகள்’. மிளகா வத்தல் உடம்பு...அழகா இல்லவே இல்ல. பாக்கவே பாவமா இருந்துச்சு.

’இரைக்காக இரையைத் தேடி இரையாகுற பார்வை..இறைவா பாத்துக்க!’ன்னு நினைச்சுகிட்டேஅவங்களுக்குத் தெரியாம கண்காணிக்கிறோம். ‘அடையாளம்’ தேடிவர்ற ‘வண்டுகளை’ மட்டுமே கரெக்ட்டா கண்டுகொண்டாங்க! மத்தபடி சுத்தி நிக்கற, கடந்து போற ஆண்களை சுத்தி வளைச்செல்லாம் இழுக்கலை. ’கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ மாதிரி தங்களை ’கண்டுகொண்டவங்களிடம்’ ‘நயன பாஷை’ பேசி ‘பயனடைய’ பாத்தாங்களே தவிர...’உல்லாசமா இருக்கலாம் வா’ன்னு செந்தமிழ் பேசி தொந்தரவு செய்யலை.

அப்புறமென்ன? நாம வந்த வேலை முடிஞ்சது. அவங்கவங்க ‘அவங்கவங்க வேலையை’ பாக்க கிளம்பிட்டாங்க! இனிமேலாச்சும் ‘அழகி’ நியூஸ் படிச்சா...அந்த ‘உல்லாச’ வார்த்தையை படிச்சதுமே கெக்கெக்கேதான!

அப்பாவின் சட்டை

Friday, August 28, 2009






ஏழாப்பு படிக்கையில்
என் முட்டிக்காலுக்கும்
கீழே தொங்கும்
அப்பாவின் சட்டை


போட்டுப் பார்த்து
பொய்மீசை முறுக்க
அப்பாவின் ஜாடையென்பர்
அம்மாவும் பாட்டியும்


தங்கச்சி பாவம்
தரையில் பாவும்
அப்பா சட்டையை
வேட்டியாக மடித்துக்கட்டி
தப்படி வைப்பதற்குள்
தடுக்கி விழுவாள்
கெக்கலிக்கும் வீடு


முனியாண்டி விலாஸ் பார்சல்
ரோஸ்ட் தோசை மாதிரி
ரெண்டு கையையும்
சுருட்டியிருப்பார் அப்பா


கசங்கிய ரூவாய் சில்லறையென
சமயங்களில் அதனுள்
புதையல் சிக்கும்


சில பொழுதுகளில்
நைந்து போன
சிகரெட் மட்டும்


எம்.ஜி.ஆர். உடுத்தின
சந்தன நிறத்தில்தான்
அப்பாவின் சட்டைகளும்


ஆறேழு வைத்திருப்பார்
அத்தனையும் அவர் வாசம்
காலரிலும் கம்முக்கட்டிலும்
பாண்ட்ஸ் பவுடர் ஜாஸ்தி


அடித்துத் துவைத்தால்
அம்மாவையே அடிப்பார்
குழந்தையை கொஞ்சுவதாக
கும்ம வேணும் நுரையால்


இஸ்திரி போட்டெடுத்தால்
அலுமினியத் தகடாக
மினுக்கணும் அவர் சட்டை


இப்போதெல்லாம்
அப்பா அணிபவை
வெள்ளை வெளிர்நீலமென
விலையதிக ரகங்களில்
நான் தந்த சட்டைகளே


ஜோப்பு நிறைய பணமிருந்தும்
விருப்ப நிற சட்டைகளை
எடுப்பதில்லையே ஏன் அப்பா?


பதில் கிடைத்தது
அப்பா சட்டைகளை
பால்யத்தில் போல
அணிந்து பார்த்ததில்...


ஒவ்வொரு சட்டையிலும்
மூச்சை நிறைக்குது
அப்பாவின் வாசத்தைவிட
புத்திரபாசத்தின் மணம்

புஷ்பா தங்கதுரையின் ராக்கெட்!

Friday, August 21, 2009

கிட்டத்துல போய்ப் பழகினா பல பேர் காட்டற நிஜமுகத்தைப் பாத்து..விட்டத்துல தூக்கு போட்டுத் தொங்கலாம் போலத்தோணும். ஆனா புஷ்பா தங்கதுரை அப்படியல்ல. சக்கரை தடவி பொய்யா பேசற வம்பான ஆளுங்களை விட..அக்கறை கலந்து உண்மை பேசற அன்பான மனிதர்.
இவரை ஒருமுறை சந்திக்கற யாருமே..மறுமுறை பாக்கப்போறப்போ சொந்த வீடு வாங்கியிருப்பாங்க!அந்த அளவுக்கு ‘சிங்கிள் டீக்கு’ சிங்கி அடிக்கறவங்களைக் கூட ஒரு சிங்கிள் பெட்ரூம் வாங்கறரேஞ்சுக்கு...கையில பொறுப்பையும், வயித்துல நெருப்பையும் கலந்துகட்டி தந்து அனுப்புவாரு!
புஷ்பா தங்கதுரை. கிளுகிளுப்பான பெயர். எழுத்துல ‘டபுள் ஆக்‌ஷன்’ மன்னன். கிறங்கடிக்கிற மாதிரி ’பெண்’மீகம் எழுதறப்போ..புஷ்பா தங்கதுரை. ரங்கநாதனைப் பத்தி ஆன்மீகம் படைச்சா..ஸ்ரீவேணுகோபாலன்.துப்பறியும் நாவல்களும், தப்பறியும் உண்மைக் கதைகளும் எழுதி வாசகர் வட்டத்தை மயங்க வைத்தவர்.
இந்த பிம்பத்தோடதான் ஒருமுறை புஷ்பா தங்கதுரையை சந்திக்கப் போனோம். வேற யாரு? நானும், அந்தணனும்தான். ‘காணாமப் போன தம்பி புள்ளைகளை மறுபடியும் கண்டுபிடிச்ச பெரியப்பா மாதிரி’பாசமா வரவேற்று உபசரிச்சாரு. வெள்ளை வேட்டி சட்டை. அதே அலைபாயும் சுருள்முடி..ஆர்வமா எட்டிப்பாக்கற கண்கள்னு சிம்பிளா இருந்தாரு.
அவரோட எழுத்துக்களைப் பத்தி விலாவரியா சிலாகிச்சுப் பேசின எங்களுக்கு விழா எடுக்காத குறைதான்.விக்ஸ் முட்டாய் முதல் செக்ஸ் கல்வி வரை அத்தனையும் அலசித் துவைச்சாரு பாருங்க..அசந்துபோயிட்டோம். ‘’எங்கூட வாங்க’’ன்னு உள்ரூமுக்கு கூட்டிட்டுப் போனாரு. கம்ப்யூட்டரை ஆன் பண்ணிஒரு ப்ராஜெக்ட்டை காட்டினாரு. வானவியல் பத்தி ஃவேறு.. ஆணிவேறா எக்கச்சக்க டீடெய்ல்ஸோட பிரிச்சு மேஞ்சிருந்தாரு.
‘’என்ன சார் இது?’’னு வியந்துபோய் கேட்டோம். மெல்லிசா சிரிச்ச புஷ்பா தங்கதுரை ‘’வானவியல் பத்திஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கேங்க! விட்டா என் வீட்டு மாடியிலிருந்தே செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்விடுவேங்க. அந்த அளவுக்கு ராக்கெட் தயாரிப்புல அப்டேட்டா இருக்கேன் சார்’’னு அதிரடியா சொல்ல..அரண்டு போயிட்டோம். இந்த வயசிலும் மனுஷனுக்கு அப்படியொரு அறிவுத் தேடல்!
அப்புறம் அப்படியே ஜாலியா அரட்டை அடிச்சோம். திடீர்னு புஷ்பா த.துரை எச்சரிக்கையான குரல்ல‘’சார்..இந்த வயசில நிறையா சம்பாதிங்க! கையில பணம் இல்லேன்னா..ரொம்ப கட்டம் (கஷ்டம்ங்கிறதை இப்படித்தான் உச்சரிக்கிறார்) சார்! கட்டுன பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா சார்! அதேமாதிரி எப்பாடுபட்டாவது ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். சொத்துபத்து இல்லேன்னாலும் சின்னதா ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். யாரு கஞ்சி தண்ணி ஊத்தலேன்னாலும்..பச்சத்தண்ணியக் குடிச்சுட்டுகாலாட்டிகிட்டு படுத்து தூங்கலாம் சார். இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்!”னு அவர் சொல்லச்சொல்ல..எங்களுக்கும் இனம்புரியாத பயமும், திடீர் துடிப்பும் வந்துருச்சு.
அப்புறம் சில வருஷ இடைவேளைக்குப் பிறகு புஷ்பா த.துரையை சந்திக்கப் போனோம்.‘மனுஷர் என்ன காயகல்பம் சாப்பிடறாரோ..அப்படியே ஜம்முன்னு இருந்தார்’. எடுத்த எடுப்புலயே‘’சார்..சொந்த வீடு வாங்கிட்டீங்களா? இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்’’னு சொன்னதுமே...நாங்க கையோட கொண்டு போயிருந்த ‘ஹவுஸிங் லோன் சாங்ஷன் லெட்டரை’ காட்டினோம்.
நம்பமாட்டீங்க...அவர் முகத்துல அப்படியொரு சந்தோஷம்! ‘’நல்ல பசங்க சார் நீங்க. ரொம்ப நல்லா வருவீங்க’’னு ஆசீர்வதிச்சார். எங்களுக்குள்ளயும் எதையோ சாதிச்சுட்ட குஷி. ஆனா எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கறதுக்கு முன்னாலயும் ஒரு பெரும் போராட்டம் நடக்கும்ல..அப்படித்தான் நடந்தது லோன் மேட்டர்லயும்.
லோன் சாங்ஷன் பண்ண அந்த தனியார் வங்கி திடீர்னு லோன் தர மறுத்திடுச்சு. காரணம் கேட்டா...சின்னப்புள்ளத்தனமா ஏதேதோ சொன்னாங்க. பல இடங்கள்ல அலைஞ்சு தேடி, நுழைஞ்சு பாத்தும்ம்ஹூம்..பாச்சா பலிக்கலை. ‘விடு’ன்னு விட்டுட்டோம். ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குஇருக்கற ஒரு திருப்தி...அந்த லோன் சாங்ஷன் லெட்டரை வெச்சு புஷ்பா தங்கதுரையையாவதுசந்தோஷப்படுத்தினதுதான்!



சிரிப்பு ரிப்பீட்டேய்!

Saturday, August 1, 2009

வெரைட்டியாக பல வெற்றிப்படங்கள் தந்து மிரட்டிய டைரக்டர் அவர்! ஊரும் வேண்டாம்..பேரும் வேண்டாம். மேட்டர் மட்டும் போதுங்ணா!

‘கல்லிலே கலைவண்ணம் கண்ட‘ மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் ‘ஃபுல்லிலே கதைவண்ணம் கண்ட‘ நம்ம டைரக்டர் தங்கியிருக்கற ஒரு ரிசார்ட். சிலுசிலுன்னு காத்தும்..குளுகுளுன்னு ஏ.சி.யும் கலந்து கலக்கற கடற்கரையோர ரூம். அடுத்த படத்துக்கான பட்டறையை போட்டு..கதையை பட்டை தீட்டிக்கிட்டிருக்காரு டைரக்டர்.

பொழுது சாஞ்சாலே பல ‘இறக்குமதி சரக்குகளை‘ உள்ளே ‘இறக்கிகிட்டு‘ பொழுதுபோக்கறது நம்ம டைரக்டரோட வழக்கம். அன்னிக்கும் வழக்கம்போல ஜாலியா பல ‘லார்ஜ்‘களை காலி பண்ணினதோட விளைவு..அடுத்தநாள் காலையில டைரக்டரோட வயிறு செம ‘லார்ஜாகி‘ அப்செட் ஆயிருச்சு.

‘சரக்குக்கு முறுக்கு‘ முதல்..‘வீட்டுக்கு பலசரக்கு‘வரை வாங்கிவந்து சேர்க்கிற டிரைவர்தான்..அன்னிக்கும் கூடவே இருந்தாரு. விடிஞ்சதிலேர்ந்தே அஜீரணக் கோளாறால ‘வயித்துக்குள்ள வன்முறை‘ நடக்கிறதை தாங்கமுடியாத டைரக்டர்..தன்னோட டிரைவரைக் கூப்பிட்டு ‘‘கடைக்குப் போயி ‘ஜெல்யூஸில்‘ வாங்கிட்டு வாப்பா‘‘ன்னாரு!

‘மிட்டாய் வாங்கப் போற சிறுவன் மாதிரி‘ சிட்டாய் பறந்தார் டிரைவர். ரெண்டு மணி நேரமாகியும் போன டிரைவர் வரவே இல்லை. டைரக்டரோ.. வயித்தெரிச்சல், நெஞ்செரிச்சலோட சேர்ந்து ஏகப்பட்ட எரிச்சலோட காத்துக்கிடக்காரு! கரெக்ட்டா அப்போ பாத்து டைரக்டரோட செல் அடிக்குது.

எடுத்தால்..மறுமுனையில் டிரைவர் ‘‘சார்..நாலைஞ்சு கடைல கேட்டுப் பாத்துட்டேன்! அந்த ஜெல்யூஸில் இல்லேங்கறாங்க!’’ன்னார் பதட்டமாக! உடனே டைரக்டர் ‘‘பரவால்ல..டைஜின் இருக்கும். அதை வாங்கிட்டு வாப்பா’’ன்னாரு. ‘‘சரிங்க சார்‘‘னு சந்தோஷமா ஃபோனை வெச்சாரு டிரைவர்.

மறுபடியும் அரைமணி நேரமாச்சு! டிரைவர்கிட்டேர்ந்து தகவலே இல்லை. அடிமனசு எரிய..ஆவேசமாகிட்டாரு டைரக்டர். நல்லவேளையா அதே நொடி டிரைவர்கிட்டேர்ந்து ஃபோன். ‘‘என்னப்பா பண்ணித்தொலையற?’’னு எரிஞ்சு விழுந்தாரு டைரக்டர். பதிலுக்கு டிரைவர் ‘‘சார்..டைஜினும் இல்லேங்கிறாங்க சார்’’னார் கூலா!

டைரக்டருக்கோ ‘‘என்னடாது..கிழக்கு கடற்கரைச் சாலையிலிருக்கற அத்தனைபேரையும் இன்னிக்கு ‘அஜீரண சுனாமி‘ அட்டாக் பண்ணிருச்சா?’’னு செம ஷாக்! அதே அதிர்ச்சியோட ‘‘ஏப்பா..எல்லா கடையிலயுமா ஜெல்யூஸிலும், டைஜினும் இல்லேங்கிறாங்க?’’னு கேட்டிருக்காரு.

‘‘ஆமா சார்..ஏழெட்டு கடை ஏறி இறங்கிட்டேன். எங்கியுமே இல்லேன்னுதான் சொல்றாய்ங்க’’ன்னாரு அந்த அப்பாவி டிரைவர். ‘சட்‘டுன்னு டைரக்டருக்கு ஒரு ‘ஸ்பார்க்‘ அடிச்சது! ‘‘ஆஹா..அவனல்லவா நீ?‘‘ன்னு உஷாரானவர்..‘‘ஏப்பா! ஏழெட்டு கடைன்னு சொல்றியே..எந்த கடைப்பா?‘‘ன்னு கிடுக்கிப்பிடி போட்டாரு.

உடனே அந்த டிரைவர் ‘‘என்ன சார்..என்னைப்போயி இப்படி நம்பாம கேக்கறீங்களே? ஈ.சி.ஆர்.ரோட்டுல இருக்கற அத்தனை ஒயின்ஷாப்பிலயும் கேட்டுட்டேன் சார். அப்பிடி ஒரு சரக்கே இல்லேய்ங்கிறாங்க!’’ன்னார் வெள்ளந்தியா! இதைக்கேட்டதுமே ‘அடப்பாவி‘ன்னு மனசு நொந்து,,குடல் வெந்து கிடந்த டைரக்டர் வாய்விட்டுச் சிரிச்ச சிரிப்புல..சிறுகுடல், பெருங்குடலே செரிச்சுப் போயிருச்சாம்!
இதனால் அறியப்படும் நீதி: ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!

‘காதல் வந்தவர்களுக்கு’ மட்டும்!

Monday, July 20, 2009

தீபாவை அப்படியொரு ‘சீச்சீ‘ சிச்சுவேஷனில் சந்திப்பேன் என்று
நான் எதிர்பார்க்கவே இல்லை. தேவதை போல இருந்தவள்...வேண்டாம்.
இப்படியாகிவிட்டாளே!

நீலாங்கரையோர ரிசார்ட். ஏ.சி. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்று கடற்கரையோர புல்வெளியில் ஜாலிநடை போட்டேன்.
அப்போது..அலையோர விளையாட்டில் மூன்று ‘ரிச்சான‘ ராஸ்கல்ஸ். நடுவே கிட்டத்தட்ட பாதி ‘ஏவாளாக‘ தீபா. ‘‘ஆ..என்
தீபாவா இவள்?’’.. அதிர்ந்து பார்த்தேன். அவளை விட்டு தள்ளிவந்து என் பக்கத்தில் நின்ற ஒருவன் ‘‘மச்சான்.. அந்த மாடலிங் ஃபிகர் நம்மகூடதான் இருக்கா. பேரு..சோனா. ஈவ்னிங் வந்துருடா’’ என்றான் குஷியான குரலில்.

அவன் சொன்னது..சோனா! இவளோ..தீபா! என் மூளையில்
குண்டூசிகள் குத்தின. செம ஷாக்கோடு அவளை ஷார்ப்பாகப் பார்த்தேன். அவளும் என்னை நேராகப் பார்த்தாள். ‘‘தீபா!‘‘ மனசுக்குள் கத்தினேன் நான். அவளோ காஷுவலாக என்னைப் பார்த்துவிட்டு எனக்கு முதுகு காட்டினாள்.

அடி ராட்சஸி! என்னாச்சுடி உனக்கு? வருஷங்கள் ஓடினால் கேரியர் மாறலாம். கேரக்டர் மாறுமா? 2001..ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..கிரியேட்டிவ் டீமில் நானும், அவளும். காஃபி, கவிதை, யுத்தம், முத்தம், காதல், கலாட்டா என இருவருக்கும் ஒரே டேஸ்ட்..ஒரே அலைவரிசை. விளைவு..டாப் கியரில் எகிறிய நட்பு..எதிர்பார்த்தபடியே ‘காதலாகி கசிந்துருகியது‘!

தீபாவை நான் டீப்பாக லவ் பண்ணியதற்கு இன்னொரு
காரணம்..அவளது கருணை மனசு! அதுவும் அனாதைக் குழந்தைகள் மீது அபார
தாய்ப்பாசம் காட்டியவள். பெரும்பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால்
சம்பாதிப்பதில் பெரும்தொகையை அனாதைப் பிள்ளைகளுக்காக செலவிடுவாள்.

சர்ப்ரைஸாக ஒருநாள் அதிகாலை என் அறைக்கு வந்தாள். ‘என்னடி‘ என்று கேட்பதற்குள்..கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தமிட்டாள். உள்ளுக்குள் ஏறிய உஷ்ணம் உச்சியிலும் ஏற..அப்படியே நானும் அவளை இறுக்கி முத்தமிட்டேன். முன்னழகை பார்த்து திணறியது மூச்சு. முழு அழகு பார்த்து குளறியது பேச்சு. அன்று எனக்கு பர்த் டே. அதுக்கான கிஃப்ட் இது!

ஒருநாள்..வீட்டிற்கு கூட்டிட்டுப் போனாள். எங்கள் காதல் பற்றி ஏற்கனவே வீட்டில் சொல்லியிருப்பாள் போல! எடுத்த எடுப்பிலேயே ஆன்ட்டி (தீப்ஸ் மம்மி) ‘‘நிச்சயமா இது ஒத்துப்போகாது. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னுடுவார். எல்லாத்தையும் மறந்துடுங்க!’’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதன்பிறகு அவளை வீட்டுச்சிறை வைத்துவிட்டார்கள் அவளது பெற்றோர்.

அதே வீட்டிற்குள் என் உயிரையே பணயம் வைத்து நுழைந்து தீபாவை சந்தித்தேன் ஒருநாள்... ‘‘கண்காணாத ஊருக்குப் போயிரலாம். உன்னை
கண்கலங்காமல் நான் காப்பாத்தறேன்..வா தீபா!’’ என்றேன். ‘‘நீயும் நானும் திருட்டுத்தனம் பண்ணலையே! எதுக்காக ஓடிப்போகணும்? என் வீட்டுல பர்மிஷன் வாங்கறேன். கொஞ்சம் பொறுடா!’’ என்றாள் அதீத நம்பிக்கையோடு!

அவ்வளவுதான்..அப்புறம் தீபாவை பெங்களூருக்கு அனுப்பி
விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு அறுந்தது. அது ஒரு காதல் காலம்!
ஆனால்..இதோ..இப்போதோ..இப்படிப் பார்க்கிறேன் இவளை! என்னைக்
கண்டுகொண்டதாகத் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை. பெயரையே மாற்றிக்கொண்டு ‘புதுத்தொழிலில்’ இறங்கிவிட்டவளுக்கு ‘பழைய காதல்‘ குப்பை மேட்டர்தான்!

சம்பவ இடத்திற்கு ‘மீண்டு’ வந்தேன். அன்று நான் கற்பனையில்கூட ஸ்பரிசிக்கத் தயங்கிய அங்கங்களை..இன்று எவனெவனோ தொட்டுத் தடவுகிறான். ‘‘உவ்வே!’’. அவள் காதுபட சத்தமாக காறி உமிழ்ந்தேன். முகம் சுளித்துப் பார்த்த தீபா ச்சே..ச்சே..சோனா சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தபடி வந்தாள். கண்ஜாடையிலேயே என்னை தனியாக வரச்சொன்னாள். ஏதோ ‘மந்திரிச்சு‘ விட்டமாதிரி நானும் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.

‘‘நான் சோனா இல்லை. தீபாதான்! டாடியோட பிசினஸ்ல பயங்கர லாஸ். வீடு, கார்னு எல்லாத்தையும் வித்து தந்தும் கடன்தொல்லை தீரலை. கௌரவமா வாழ்ந்த குடும்பம். கடைசியில சூசைட் பண்ணிக்கற நிலைமைக்கு வந்துருச்சு. வேற வழி? வீட்டுக்கு ஒரே பொண்ணு. நாந்தானே அவங்களை காப்பாத்தியாகணும்?

கை நிறைய சம்பாதிச்சாலும் கடனுக்கும், வாடகைக்குமே சரியாப் போகுது. ஃபிரெண்ட் ஒருத்தி ஐடியா குடுத்தா. தடாலடியா நானும் டிசைட் பண்ணேன். சோனான்னு பேரை மாத்தி மாடலிங்கில் இறங்கினேன். பேருக்குத்தான் மாடலிங். ஆனா பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ் சிலபேருகிட்ட ரெகுலரா ‘கான்டாக்ட்ஸ்‘ இருக்கு. அவங்களோட ‘விளையாட்டுப் பொம்மை‘ நான்!’’.. மூச்சுவிடாமல் தீபா சொன்னதைக்கேட்டு மூச்சு வாங்கியது எனக்கு!

கையிலிருந்த மினரல் வாட்டரை நீட்டி ‘‘குடிக்கிறியாப்பா?’’ என்று அதே கனிவோடு கேட்டாள். வெட்டி வீறாப்போடு ‘‘வேணாம்‘‘ என மறுத்தேன்.
வருத்தமான புன்னகையோடு ஒரு மடக்கு குடித்துவிட்டு தொடர்ந்தாள்..‘‘இப்போ
மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கறேன். நிம்மதியா இருக்கு ஃபேமிலி. என்னை உயிரா மதிச்சு..பாசமா வளர்த்த என் டாடி, மம்மி நல்லா இருக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!’’ என்றாள் அழுகையும், ஆவேசமும் கலந்து தெறிக்க!

அருகில் வந்தவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க..‘ அதிர்ந்துபோய் நின்றேன் நான்! ‘‘‘என் உடம்பை யார்யாரோ தொட்டாலும்..என் மனசை முதல்முதலா தொட்டவன் நீதான்! இப்பவும் என் மனசுக்குள்ள உயிரா ஓடறது..நானும் நீயும் காதலர்களா இருந்த அந்த அற்புதமான நாட்கள்தான்! எனக்காக உன் உயிரையே தர்ற அளவுக்கு துணிஞ்ச உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். செய்வியா..ப்ளீஸ்?’’ என்றாள்.

இன்னமும் என் அடிமனசில் புதைந்து கிடந்த அவள் மீதான
காதல்..அவள் இப்படிக் கேக்க வெடித்து சிதறிவிடும் போலிருந்தது! ‘‘செய்றேம்மா!’’ என்றேன் தீனமான குரலில். ‘‘ப்ளீஸ்..உன் பழைய தீபாவா உனக்கு ஒரு பாச முத்தம் தரவா..ப்ளீஸ்!’’ என்றவள்..அருகே வாசனையாக வந்து என் உதட்டில் ஒரு முத்தத்தை அழுத்தமாக தந்துவிட்டுப் போனாள்!

வாய்விட்டு கதறி அழுதேன்! காரணம்..வாய் வைத்துக் கொடுத்த ‘‘சோனா‘‘வின் முத்தத்தில்..உப்புக் கரித்தது என் தீபாவின் கண்ணீர்!
(பின்குறிப்பு: இது எனது நண்பனின் அனுபவம்!)

சென்னை டைரிக்குறிப்பு!

Thursday, July 16, 2009

அதிகாலையில் ‘சூடான டீ. காஃபிக்களுக்காக’ ‘ஆவின் பால்’கள் ஜில்லென்று வாசலில் பூத்திருக்கின்றன. ‘கௌசல்யா சுப்ரஜா‘ அரைத்தூக்கத்தில் காதினில் சுக ராகம் பாய்ச்சுகிறது.

கடற்கரையில் ‘சக்கரை‘ வி.ஐ.பி.கள், ’தொப்பை ‘தாங்கிகள் காரில் வந்து காஸ்ட்லியாக மூச்சு வாங்குகிறார்கள்.

புதுசான சூரிய ஒளியில் ‘தி ஹிந்து‘க்களும், ‘எக்ஸ்ப்ரஸினரும்‘ சுடச்சுட மொடமொடக்கிறார்கள். ரோட்டோர டீக்கடையில் ‘யுவன்ஷங்கர் ராஜா‘வுடன் அலறும் ‘ஹாரிஸ்‘. அத்தனை வாகனங்களையும் மேற்பார்வையிடும் அண்ணா மேம்பாலக் குதிரைவீரன். மெத்தப்படித்த மேதாவிகளை இரவு பகலாக பிளாட்ஃபார்மில் நிற்கவைத்து ‘சமத்துவம்‘ போதிக்கும் ‘அமெரிக்கத் தூதரகம்‘.

சாய்ந்து ஊர்ந்திடும் அரசு பஸ்களில் மூச்சுத்திணறும் நடுத்தர
வர்க்கம். அதனுள்ளே நெருக்கத்தில் ‘திருட்டு ஸ்பரிசம்‘ தேடும் ‘தகாத விரல்கள்‘.
அக்கறையாக கணவன் வயிற்றில் கையால் கொக்கி போட்டு ‘சக்கரை மொழி‘ பேசி அலுவலகம் பயணிக்கும் ‘அகல முதுகு‘ மனைவி‘மார்கள்‘.

டூ வீலரில் வித்தை காட்டுவது ‘பையனா பொண்ணா‘ என்று ‘பால் நிர்ணயம்‘ செய்வதற்குள் ‘பின் கூந்தல்‘ பறக்க ‘வ்ர்ரூம்மிடும்‘ இளசுகள். குவியல் குவியலாக அவியல் மக்களை தனக்குள் அடைகாத்திருக்கும் ‘ஸ்பென்சர் பிளாசா‘. அண்ணா சாலையில் அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்நாளைய அதே ‘பதினாலு மாடி எல்.ஐ.சி.‘ மாநகரச் சுவர்களில் அரை, முக்கால் நிர்வாணிகளாய் காட்சியளிக்கும் சினிமா ‘ஆதாம் ஏவாள்கள்‘.

இளமைப் பட்டாளத்தை தனது பெயருக்கு ‘பட்டா‘ போட்டுக்
கொண்டு குளுமையாக படம் காட்டுகிற ‘சத்யம் காம்ப்ளெக்ஸ்‘. அசுத்தமான மானிடர்களால் கறைபட்டு துக்கமாய் ஓடும் ‘கறுப்பு கூவம்‘. இஷ்டத்திற்கு சாணி கழித்து மனிதர்களுடன் சமமாக ஊடாடும் திருவல்லிக்கேணி மாடுகள். அழகான..அழுக்கான மேன்ஷன்களில் அடைந்து கிடக்கும் ஜீன்ஸ் பிரம்மச்சாரிகள். ‘குட்டி ஆஃப்கானிஸ்தானோ‘ என ஆச்சரியப்படுத்தும் கூட்டமான பர்தா பெண்கள்.

‘தென்மாவட்ட மனிதச் சங்கிலிகளை’ தினந்தோறும் நடத்துகிற
‘எழும்பூர் ரயில் நிலையம். ‘தேசிய ஒருமைப்பாட்டின் ஓடுதளமான‘ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். எத்தனையோ ‘எத்தன்களை‘ தனக்குள் பிடித்து வைத்திருந்து இன்று இடிபடப்போகும் மத்திய சிறை. ‘ஜொள் விளையாட்டு‘ மட்டுமல்ல..இளைஞர்களின் திறமையான ‘உள்விளையாட்டையும் பாரு’ என்று மகா அரங்கம் வைத்து காத்திருக்கும் ‘நேரு‘.

பல மைல்களுக்கு அப்பாலிருந்து வரும் காதலர்கள் தனது
‘முப்பாலில்‘ இருந்து மட்டுமே ‘கொட்டம்‘ அடிக்க ‘கோட்டம்‘ தந்த ‘வள்ளுவர்’. லட்சக்கணக்கானோரின் இச்சை தீர்க்க காமிரா முன் கச்சை காட்டும் கோலிவுட்
ஜிகினாப்பெண்கள். ‘இன்னோவா, ஆக்சென்ட்‘களை வழுக்க விட்டுவிட்டு ‘இன்னாபா‘ என்கிற டி.வி.எஸ். ஒல்லி வண்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்கும் டிராபிக் போலீஸ்.

‘த்தா..கீசிடுவேன்‘னு சக தமிழனையே திணறவைக்கும்
தெனாவட்டான ‘சென்னை செந்தமிழ்‘. மூன்றுமணி சுளீருக்கு பஸ் ஸ்டாப்களில் ‘ஜிலீர்‘ இளைப்பாறுதல் தரும் காலேஜ் குமரிகள். இருபது ரூபாய் தூரத்துக்கு நாப்பது ரூவா பறிக்கும் ‘சம்பல்‘ ஆட்டோக்கள். ரஜினியின் தும்மலைக்கூட எட்டுப் பக்க கவர்ஸ்டோரியாக்கி ‘எக்ஸ்க்ளூசிவ்‘ எனத் தொங்கும் வாரப்பத்திரிகைகள். சேனல் மழைக்காக டி.டி.எச். குடை பிடிக்கும் அபார்ட்மென்ட்கள்.

‘கறுப்புப்பூனைகளை‘ முன்னே ஓடவிட்டு ‘கறுப்புகளை‘
பொறுப்பாகக் காப்பாற்றப் ‘பாடுபடும்‘ அரசியல் தலைவர்கள். கொடிபிடிக்க கை தூக்கி..கோஷம் போட வாய் வளர்த்த அப்பாவி ‘தொண்டர்கள்‘. இந்த ‘கல்லாத‘ பேரையெல்லாம் பார்த்து நொந்து ‘கல்லாகிப்போன‘ ‘சிலைத் தலைவர்கள்’.

அடுத்தடுத்து புதுப்புதுசாக நுரைதள்ளும் மெரீனா அலைகள். ‘அசிங்க சங்கதி‘ நடக்கும் இடத்தை வேடிக்கை பார்ப்பதற்கான தண்டனையாக தலைகளில் எச்சம் சுமந்த சிலைகள். இருட்டிய அறையில் செய்யவேண்டியதை ‘சுண்டல் சிறுவர்களின்‘ வெறிப்புகளுக்கிடையே அரையிருட்டில் ‘கொக்கோகிக்கும்‘ சகல வயது ஆடவர்..மகளிர்.
பின்னிரவு வரை போதை மயக்கம் ஏற்றும் நட்சத்திர ஹோட்டல்கள். ஐநூறு ரூபாயில் வாய் துடைக்கும் கரன்சி சுல்தான்கள். ஆயிரக்கணக்கான ரூபாய் பில்லுக்கு அலட்சியமாய் நீட்டும் ‘கிரெடிட் கார்டர்கள்‘.

வங்கக்கடல் அலையின் தாலாட்டில் நனையாமல் ‘அணையா
விளக்கோடு‘ சதுக்கத்தில் தூங்கும் தங்கத் தமிழ்மகன் அறிஞர் அண்ணா. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று இன்றும் தமிழ்மக்கள் மதித்துத் துதித்து..நினைவிடத்தில் ‘எங்கள் தங்கமாய்‘ மங்காமல் ஜொலிக்கிற ‘புரட்சித்தலைவர்‘ எம்.ஜி.ஆர். கடலுக்கே வெளிச்சம் வீசி..தனக்குக் கீழே இருட்டாக இருக்கிற ‘கலங்கரை விளக்கம்‘.

இரவுகளில்..குடிசை, பங்களா, ப்ளாட்ஃபார்ம், கார் என ‘இட
பேதம்‘ பாராது ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த ஒரு காரியம்‘ முடித்து தூங்கிப்போகும் மானுடம்! குட்நைட் சென்னை!

‘மதுரை ஒரிஜினல் கூட்டாஞ்சோறு!’

Sunday, July 5, 2009



‘கால்மணி நேரம் சந்திச்சா போதும்..எந்த துறையிலும் கால் பதிச்சு ஜெயிச்சுரலாம்‘ங்கற நம்பிக்கையை கையில் தந்து, கைகொடுத்து அனுப்பறவர்
மதிப்பிற்குரிய மாலன் சார்!

‘சிறந்த எழுத்தாளர்..புகழ்பெற்ற பத்திரிகையாளர்..ஆழமான அரசியல் விமர்சகர்..அபாரமான ரசனையாளர்‘னு மீடியாவின் அத்தனை ‘திசைகளிலும்‘ வெளிச்சம் பாய்ச்சியவர்!

சமீபத்தில் மாலன் சாரை சந்தித்தேன். முகத்தில் அதே இளமை..பேச்சில் அதே இனிமை. மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்த மாலன் சார் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தனான‘ எனது இந்த ‘கூட்டாஞ்சோறு‘ சமர்ப்பணம்!

'படைத்தல்..காத்தல்..அழித்தல்‘னு ஏதாவதொரு வகையில் பணி செய்து ராப்பகலாக உறங்காமல் உலாவும் ‘கடவுள்களின் ஜெராக்ஸர்களான‘ மனிதர்கள். ‘வையை எனும் பொய்யாக் குலக்கொடி‘ என மெச்சிய ‘சிலப்பதிகாரத்தை‘
பொய்யாக்கிவிட்டு.. வெள்ளம் வந்தால் மட்டுமே கங்கு கரை வரை ‘நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடும் ‘வைகை‘ (நதி?) கம்மாய்.

வெள்ளையன் தூக்கிலிட்ட பின்னும் அந்த கம்பீரம் குறையாமல் இன்னும் சிலையாய் வாளேந்தி நிற்கும் ‘கட்டபொம்மன்‘. நகரத்தின் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் ‘வ்ர்ர்ரூம்ம்‘ என வந்துபோகும் ‘அரசுப் பேருந்துகள்‘. ‘அங்கிட்டும் இங்கிட்டுமாக‘ ஜனங்கள் பரபரக்கும் ‘பெரியார் பஸ் ஸ்டாண்ட்‘. தள்ளி நின்று ஒல்லியான குரலில் ‘‘ரூம் வேணுமாணே? பார்ட்டி ரெடி‘‘னு அடித்தொண்டையில் அழைப்பு விடும் ‘அவனா நீ‘க்கள். கூட்டமாக முண்டியடிக்கும் ‘பலரக‘ யூனிஃபார்ம் ‘துணி(மாணவ) மணிகள்.‘

அள்ளிச்செருகிய கூந்தல் கலையாமல்..வாயில் வெத்தலையையும்,கையில் கூடையையும் இடுக்கியபடி மிடுக்காக நடக்கும் ‘காதுவளத்த‘ பாட்டிகள். கிட்டத்திலேயே ‘சதக் சதக்‘ கொலையை ரத்தமும் மையும் உலர்வதற்கு முன்னரே முந்தித்தரும் ‘தினத்தந்தி‘ ஆபீஸ். அன்று பூத்து இன்று குலுங்கி என்றுமே வாசம் ‘கும்ம்‘மிடும் அதே வெள்ளைவெளேர் ‘மதுரை மல்லி’.

பேச்சுக்குப் பேச்சு ராகம் கலந்த ‘அண்ணே‘ போடும் ‘ஆறிலிருந்து அறுபது வயதான‘ தம்பிகள். நண்டு சிண்டுகள் முதல் பெண்டுலம் கழண்ட தொண்டு கிழம் வரை சகலருக்கும் ஒரு காலத்தில் ‘முண்டு அணிந்த குண்டு பெண்டுகளால்‘ வெள்ளித்திரையில் ‘கிளுகிளு‘ விருந்தளித்த ‘தங்க ரீகல்‘.

எதிரே..‘இதைத்தான் அமிர்தம்னாய்ங்களோ‘னு வியக்கவைத்து.. சுடச்சுட கமகமக்க தேக்கிலையில் வாங்கி ‘க்ளுக் க்ளுக்‘னு விழுங்க..தொண்டையிலேயே கரைந்து உயிர்வரை இனிக்கும் ‘திருநெல்வேலி அல்வா‘. மதுரையை பத்திரமாய் ஆண்ட ராணி மங்கம்மாவின் ‘மிச்ச நினைவுத்துணுக்காய்‘ மங்கம்மா சத்திரம்.

‘க்ளிப், கர்ச்சீப், ஜீன்ஸ், சட்டை, பேனா, டி.வி, கேசட், ஸ்டிக்கர், கடுக்காய், டி.வி.டி, பெல்ட், கத்தி, காபித்தூள்..என்ன வேணும்ணே‘னு சுத்தி நின்னு கத்திக்கூப்பிடும் டவுன்ஹால் ரோட்டில்..உதிரியாகச் சிதறி நிற்கும் ‘மினி மனித
டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்‘. ‘சொக்க‘ வைக்கும் ‘மீனாட்சி‘ கோபுரங்கள். அதன்
மாடங்களில் வாடகையின்றி குடியிருக்கும் ஜாலியில் சடசடக்கும் புறாக்கள். சரிசனமாக தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள். எப்போதுமே நெரிசலான நாலுமாசி வீதிகள்.

‘பசும்பொன்‘ நிறத்தில் பிரகாசிக்கும் கோரிப்பாளையம் ‘தேவர்‘ சிலை. நாற்புறமும் ‘டூ..த்ரீ..ஃபோர்..சிக்ஸ் வீலர்களில்‘ காதலி, மனைவி, அம்மா, பிள்ளை, பங்காளிகளுடன் சிக்னலில் சிக்கி நிக்க..நடுவே சுகமாக ‘கம்புக்கூடு‘ சொறியும் தொத்தலான போலீஸ்காரர். ‘வைகையில்‘ குளித்து வந்த ஒட்டுமொத்த மதுரைக்கே கட்டிமுடிக்கற அளவுக்கு ‘அஞ்சாநெஞ்சனின்‘ விசுவாசிகள் கட்டிவைத்திருக்கிற ‘விசுவரூப‘ விளம்பர
போர்டுகள்.

அசிட்டிக் வாசம்‘ கமழும் அரசு ராசாசி மருத்துவமனை. அழுக்காக
நோயாளிகள்..விசனத்தோடு ‘உறமுறைகள்‘..சிரிப்போடு கடக்கும் டாக்டர்கள். அந்த ‘முண்டாசு கட்டிய முறுக்கு மீசைக்காரன்‘ ஒரு காலத்தில் தன் ‘குஞ்சுகளுக்கு‘ ‘அக்னி‘ ஊட்டிய அதிசயம் நிகழ்ந்த ‘சேதுபதி மேல்நிலைப்பள்ளி‘.

பிரிட்டிஷ் காலத்துக் கம்பீரத்துடன் கலெக்டர் ஆபீஸ். சராசரி
வாழ்நாளான ஐம்பதாண்டுகளில்&முப்பது வருஷமாக வீட்டுப்பட்டா கோரி அலையும் சுத்துப்பட்டு 18 பட்டி ஆம்பளை பொம்பளைகள். ‘முதியோர் பென்ஷனுக்காக‘ பியூனையே ‘கலைக்டராக‘ நினைத்து கெஞ்சும் ரவிக்கை போடாத மூதாட்டிகள். கலெக்டர் தவிர..மற்ற மாந்தர்களையெல்லாம் ‘அற்ப புழுவே‘ன்னு பார்த்துச் செல்லும் கிளார்க்குகள்.

‘கமுக்கமாக‘ பல சம்பவங்களை புதைத்து வைத்திருக்கும் ‘தமுக்கம் மைதானம்‘. புத்தக மூட்டை சுமக்கும் வயசுல சாக்கு மூட்டை சுமந்து பேப்பர்
பொறுக்கும் ‘போஷாக்கு போதாத‘ ‘இந்தியாவின் எதிர்காலம்‘. அசையாத சைவர்களையும் அசைத்துவிடும் ‘அசைவ முனியாண்டி, தலப்பாகட்டி நாயுடு‘கள்.

ஒவ்வொரு கார்த்திகைத் திருநாளன்றும் ‘இந்து..முஸ்லிம்‘ ஒற்றுமைக்கு ஏதாவது ஊறு நேருமோ என ‘மலை உச்சியில் தீபத்தை‘ கட்டிக்கொண்டு பதற்றத்தோடு காத்திருக்கும் ‘திருப்பரங்குன்றம்‘. ஹாலிவுட் நடிகன்லேர்ந்து இன்னிக்கு காலையில் அறிமுகமான ‘புதுமுக ஜுஜுபி‘வரை அகில உலகத்துக்கே ரசிகர் மன்றம் வைத்து ‘கலை‘ வளர்க்கும் ‘ஜிகர்தண்டா‘ ரசிகர்கள். எக்கச்சக்க மேதைகளை ‘உருவாக்கி..உள்ளடக்கி’ வைத்துள்ள ‘காமராசர் பல்கலைக்கழகம்‘.

‘ஐயோ பசி‘ன்னு வந்தோர்க்கு எந்த நேரமும் ‘ஐயா..ருசியா புசி‘ன்னு படையல் போடுற ‘டண்டக்கு டண்டக்கு‘ கொத்துபரோட்டாக்கள். ‘அலாவுதீன்‘ பறக்கும் இட்லிகள். மணிரத்னம் பட ஷூட்டிங்கிற்கு தன் புராதன ‘மகாலை‘ வாடகைக்கு விடும் ‘நாயக்கர்‘. ‘கஞ்சா புகையோடு‘ சந்துகளில் அஞ்சாமல் நெளிந்து ஓடும் சைக்கிள் ரிக்ஷாக்கள். ‘பாட்ஷா‘ ஸ்பீடில் பாய்கிற ஆட்டோக்கள். ஊருக்குப் போகிற ‘அவசரத்தில்‘ ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு ‘கட்டணக் கழிப்பறை‘ முன்னே நிற்கிற ‘அவஸ்தை பயணிகள்‘.

‘தல‘யை வம்புக்கிழுத்த ‘தளபதி‘ ரசிகருக்கு கத்திக்குத்து‘னு
அசால்ட்டா அடுத்தநாள் காலைப் பேப்பருக்கு செய்தி கொடுத்துவிட்டு..மத்திய சிறையில் ‘கைதியாகவும்‘, ஆஸ்பத்திரியில் ‘அவசர வார்டிலும்‘ தூங்கும் ‘அவசர ஆவேச வாலிபர்கள்‘. ‘உலக நாயகனையே‘ ‘புன்னகை மன்னனாக்கிய‘ பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். ‘‘ம்..கொல்றாய்ங்கய்யா‘‘னு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்து அலுங்காமல் ‘தமிழ்‘ போதித்து.. நிறத்திலும், பேச்சிலும் ‘கருப்பட்டியாக‘ இனிக்கும் ‘சாலமன் பாப்பையா‘. வர்றேண்ணே!

 
சுடச்சுட - by Templates para novo blogger