’அவன் இவன்’ தெரியுமா?

Saturday, February 19, 2011







’சதக் சதக்’ கரு.பழனியப்பன்

செல்லோ, மெசேஜோ செல்லமாக ‘டேய்’ என்றுதான் அழைப்பான் கரு.பழனியப்பன். பிப்.13ம் தேதி இரவு விஜய் டிவி ‘நீயா நானா’வில் இயக்குநர் கரு.பழனியப்பனைப் பார்த்தேன்.
அப்போதுதான் குளிச்சுட்டு வந்தவன்போல் பளிச்சென்று இருந்தான். என் அன்பு நண்பன். ஆகவேதான் ‘அவன்’. அன்று காதல் பற்றிய விவாதம். எப்போதுமே கரு.பழனியப்பன் பேச்சு ‘சதக் சதக்’ என்று தைக்கும். அன்றும் அப்படித்தான். ‘காதலில் பித்து அதிகம்தான். ஆனால் அதையும் ரசிக்கணும்’ என்றவன் அடுத்து சொன்ன ‘சதக்’...’’மூன்றாம்பிறை’ படத்துல க்ளைமாக்ஸ். ஸ்ரீதேவி ரயிலில் கிளம்பறாங்க. கமல் தன் தலையில குடத்தை வெச்சு, குரங்கு ஜாடை காட்டி, குட்டிக்கரணம் அடிச்சு. விளக்குக் கம்பத்துல முட்டி விழுகறதை பாத்து நாமெல்லாம் கண்கலங்குனோம். ஆனா அது தேவையே இல்லை. ஹீரோயின்
ரயில்லதானே போறா...அதே ரயில்ல ஏறி அடுத்த ஸ்டேஷன்ல அவகிட்ட போய் நடந்ததைச் சொல்லிரலாமே. ஆனா கமல் அப்படி தவிக்கற அந்தப் பித்தைத்தான் நாம ரசிக்கிறோம்’ என்று ’சதக்’க...அரங்கமே கிறங்கி ரசித்தது. பழனி மதுரைக்காரன். 1991ல் பைக் விபத்தில் பழனியப்பன் அடிபட்ட சமயம்...விகடன் மாணவப் பத்திரிகையாளர் தேர்வு நடந்தது. உடம்பில் முக்கால் சதவீத பேண்டேஜ்களோடு முக்காமல் முனகாமல் வீல்சேரில் வந்து தேர்வெழுதி நிருபரான இந்தப் படுபாவியின் அசகாயசூரத்தனத்தை மீனாட்சி அறிவாள்...
கெக்கெக்கே...’மந்திரப்புன்னகை’ நாயகி அல்ல!

’குணா’ச்சித்திர நடிகர்

உணர்வில்...சிவாஜி குழைவு, எம்.ஜி.ஆர்.விளைவு - ரெண்டும் கலந்த ’கவலை’ குணா. உருவத்தில்...கொஞ்சம் ரஜினி, கொஞ்சம் வைரமுத்து- இருவர் கலந்த கலவை இதே குணா. பத்திரிகையாளர். அபாரமான பாடகன். நெருங்கிய நண்பன். ஆகவேதான் ‘இவன்’.பாட ஆரம்பித்தால்...இவன் குரலில் பாகவதர், டி.எம்.எஸ்., நாகூர் அனிபா ஆகியோர் முகம் காட்டி சுகம் ஊட்டுவார்கள். பாசம் வந்தால் மடியிலேறி சாய்வான். ரோஷம் வந்தால்
மாடியிலிருந்தே பாய்வான். (குணாவை வைத்து ஒரு அட்டகாசமான கேரக்டரை பொட்டலம் கட்டி வைத்திருக்கிறேன். அது தனிக்கதை) சுமோ சீறிப்போனாலே எமோஷனலாகிற குணாவை ‘பதினாறு’ படத்தில் கமுக்கமாகக் குமுறும் பெருசு ரோலில் நடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் எஸ்.டி.சபா. யம்மா...சும்மா சொல்லக்கூடாது, கலங்கடித்து விட்டான் குணா! படத்தில் ஒரு நடிகன் அழும்போது, பார்க்கிற ரசிகனும் கண்கசிந்தால் அதுதான் குணச்சித்திர நடிப்பு. ’பதினாறில்’ ஒரு காட்சியில்...மனசுக்குள் பொத்திவைத்த கத்தியாக குத்திக்கிழித்த சோகமும் மானமும் கலந்து வெடிக்க, அக்காவின் காலில் விழுந்து குணா அழும்போது விசும்ப வைத்துவிட்டது ‘குணா’ச்சித்திர நடிப்பு. இனி துணிஞ்சு வேலையை ரிசைன் பண்ணலாம்...பயப்படாத குணா! நீ அல்ல, அந்தணனும், சக்திவேலும் அப்புறமா நானும். ‘கால்ஷீட் மேனேஜர்’ வேலை கைவசம் இருக்கப்பு!

 
சுடச்சுட - by Templates para novo blogger