‘காதல் வந்தவர்களுக்கு’ மட்டும்!

Monday, July 20, 2009

தீபாவை அப்படியொரு ‘சீச்சீ‘ சிச்சுவேஷனில் சந்திப்பேன் என்று
நான் எதிர்பார்க்கவே இல்லை. தேவதை போல இருந்தவள்...வேண்டாம்.
இப்படியாகிவிட்டாளே!

நீலாங்கரையோர ரிசார்ட். ஏ.சி. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்று கடற்கரையோர புல்வெளியில் ஜாலிநடை போட்டேன்.
அப்போது..அலையோர விளையாட்டில் மூன்று ‘ரிச்சான‘ ராஸ்கல்ஸ். நடுவே கிட்டத்தட்ட பாதி ‘ஏவாளாக‘ தீபா. ‘‘ஆ..என்
தீபாவா இவள்?’’.. அதிர்ந்து பார்த்தேன். அவளை விட்டு தள்ளிவந்து என் பக்கத்தில் நின்ற ஒருவன் ‘‘மச்சான்.. அந்த மாடலிங் ஃபிகர் நம்மகூடதான் இருக்கா. பேரு..சோனா. ஈவ்னிங் வந்துருடா’’ என்றான் குஷியான குரலில்.

அவன் சொன்னது..சோனா! இவளோ..தீபா! என் மூளையில்
குண்டூசிகள் குத்தின. செம ஷாக்கோடு அவளை ஷார்ப்பாகப் பார்த்தேன். அவளும் என்னை நேராகப் பார்த்தாள். ‘‘தீபா!‘‘ மனசுக்குள் கத்தினேன் நான். அவளோ காஷுவலாக என்னைப் பார்த்துவிட்டு எனக்கு முதுகு காட்டினாள்.

அடி ராட்சஸி! என்னாச்சுடி உனக்கு? வருஷங்கள் ஓடினால் கேரியர் மாறலாம். கேரக்டர் மாறுமா? 2001..ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..கிரியேட்டிவ் டீமில் நானும், அவளும். காஃபி, கவிதை, யுத்தம், முத்தம், காதல், கலாட்டா என இருவருக்கும் ஒரே டேஸ்ட்..ஒரே அலைவரிசை. விளைவு..டாப் கியரில் எகிறிய நட்பு..எதிர்பார்த்தபடியே ‘காதலாகி கசிந்துருகியது‘!

தீபாவை நான் டீப்பாக லவ் பண்ணியதற்கு இன்னொரு
காரணம்..அவளது கருணை மனசு! அதுவும் அனாதைக் குழந்தைகள் மீது அபார
தாய்ப்பாசம் காட்டியவள். பெரும்பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால்
சம்பாதிப்பதில் பெரும்தொகையை அனாதைப் பிள்ளைகளுக்காக செலவிடுவாள்.

சர்ப்ரைஸாக ஒருநாள் அதிகாலை என் அறைக்கு வந்தாள். ‘என்னடி‘ என்று கேட்பதற்குள்..கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தமிட்டாள். உள்ளுக்குள் ஏறிய உஷ்ணம் உச்சியிலும் ஏற..அப்படியே நானும் அவளை இறுக்கி முத்தமிட்டேன். முன்னழகை பார்த்து திணறியது மூச்சு. முழு அழகு பார்த்து குளறியது பேச்சு. அன்று எனக்கு பர்த் டே. அதுக்கான கிஃப்ட் இது!

ஒருநாள்..வீட்டிற்கு கூட்டிட்டுப் போனாள். எங்கள் காதல் பற்றி ஏற்கனவே வீட்டில் சொல்லியிருப்பாள் போல! எடுத்த எடுப்பிலேயே ஆன்ட்டி (தீப்ஸ் மம்மி) ‘‘நிச்சயமா இது ஒத்துப்போகாது. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னுடுவார். எல்லாத்தையும் மறந்துடுங்க!’’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதன்பிறகு அவளை வீட்டுச்சிறை வைத்துவிட்டார்கள் அவளது பெற்றோர்.

அதே வீட்டிற்குள் என் உயிரையே பணயம் வைத்து நுழைந்து தீபாவை சந்தித்தேன் ஒருநாள்... ‘‘கண்காணாத ஊருக்குப் போயிரலாம். உன்னை
கண்கலங்காமல் நான் காப்பாத்தறேன்..வா தீபா!’’ என்றேன். ‘‘நீயும் நானும் திருட்டுத்தனம் பண்ணலையே! எதுக்காக ஓடிப்போகணும்? என் வீட்டுல பர்மிஷன் வாங்கறேன். கொஞ்சம் பொறுடா!’’ என்றாள் அதீத நம்பிக்கையோடு!

அவ்வளவுதான்..அப்புறம் தீபாவை பெங்களூருக்கு அனுப்பி
விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு அறுந்தது. அது ஒரு காதல் காலம்!
ஆனால்..இதோ..இப்போதோ..இப்படிப் பார்க்கிறேன் இவளை! என்னைக்
கண்டுகொண்டதாகத் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை. பெயரையே மாற்றிக்கொண்டு ‘புதுத்தொழிலில்’ இறங்கிவிட்டவளுக்கு ‘பழைய காதல்‘ குப்பை மேட்டர்தான்!

சம்பவ இடத்திற்கு ‘மீண்டு’ வந்தேன். அன்று நான் கற்பனையில்கூட ஸ்பரிசிக்கத் தயங்கிய அங்கங்களை..இன்று எவனெவனோ தொட்டுத் தடவுகிறான். ‘‘உவ்வே!’’. அவள் காதுபட சத்தமாக காறி உமிழ்ந்தேன். முகம் சுளித்துப் பார்த்த தீபா ச்சே..ச்சே..சோனா சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தபடி வந்தாள். கண்ஜாடையிலேயே என்னை தனியாக வரச்சொன்னாள். ஏதோ ‘மந்திரிச்சு‘ விட்டமாதிரி நானும் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.

‘‘நான் சோனா இல்லை. தீபாதான்! டாடியோட பிசினஸ்ல பயங்கர லாஸ். வீடு, கார்னு எல்லாத்தையும் வித்து தந்தும் கடன்தொல்லை தீரலை. கௌரவமா வாழ்ந்த குடும்பம். கடைசியில சூசைட் பண்ணிக்கற நிலைமைக்கு வந்துருச்சு. வேற வழி? வீட்டுக்கு ஒரே பொண்ணு. நாந்தானே அவங்களை காப்பாத்தியாகணும்?

கை நிறைய சம்பாதிச்சாலும் கடனுக்கும், வாடகைக்குமே சரியாப் போகுது. ஃபிரெண்ட் ஒருத்தி ஐடியா குடுத்தா. தடாலடியா நானும் டிசைட் பண்ணேன். சோனான்னு பேரை மாத்தி மாடலிங்கில் இறங்கினேன். பேருக்குத்தான் மாடலிங். ஆனா பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ் சிலபேருகிட்ட ரெகுலரா ‘கான்டாக்ட்ஸ்‘ இருக்கு. அவங்களோட ‘விளையாட்டுப் பொம்மை‘ நான்!’’.. மூச்சுவிடாமல் தீபா சொன்னதைக்கேட்டு மூச்சு வாங்கியது எனக்கு!

கையிலிருந்த மினரல் வாட்டரை நீட்டி ‘‘குடிக்கிறியாப்பா?’’ என்று அதே கனிவோடு கேட்டாள். வெட்டி வீறாப்போடு ‘‘வேணாம்‘‘ என மறுத்தேன்.
வருத்தமான புன்னகையோடு ஒரு மடக்கு குடித்துவிட்டு தொடர்ந்தாள்..‘‘இப்போ
மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கறேன். நிம்மதியா இருக்கு ஃபேமிலி. என்னை உயிரா மதிச்சு..பாசமா வளர்த்த என் டாடி, மம்மி நல்லா இருக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!’’ என்றாள் அழுகையும், ஆவேசமும் கலந்து தெறிக்க!

அருகில் வந்தவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க..‘ அதிர்ந்துபோய் நின்றேன் நான்! ‘‘‘என் உடம்பை யார்யாரோ தொட்டாலும்..என் மனசை முதல்முதலா தொட்டவன் நீதான்! இப்பவும் என் மனசுக்குள்ள உயிரா ஓடறது..நானும் நீயும் காதலர்களா இருந்த அந்த அற்புதமான நாட்கள்தான்! எனக்காக உன் உயிரையே தர்ற அளவுக்கு துணிஞ்ச உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். செய்வியா..ப்ளீஸ்?’’ என்றாள்.

இன்னமும் என் அடிமனசில் புதைந்து கிடந்த அவள் மீதான
காதல்..அவள் இப்படிக் கேக்க வெடித்து சிதறிவிடும் போலிருந்தது! ‘‘செய்றேம்மா!’’ என்றேன் தீனமான குரலில். ‘‘ப்ளீஸ்..உன் பழைய தீபாவா உனக்கு ஒரு பாச முத்தம் தரவா..ப்ளீஸ்!’’ என்றவள்..அருகே வாசனையாக வந்து என் உதட்டில் ஒரு முத்தத்தை அழுத்தமாக தந்துவிட்டுப் போனாள்!

வாய்விட்டு கதறி அழுதேன்! காரணம்..வாய் வைத்துக் கொடுத்த ‘‘சோனா‘‘வின் முத்தத்தில்..உப்புக் கரித்தது என் தீபாவின் கண்ணீர்!
(பின்குறிப்பு: இது எனது நண்பனின் அனுபவம்!)

சென்னை டைரிக்குறிப்பு!

Thursday, July 16, 2009

அதிகாலையில் ‘சூடான டீ. காஃபிக்களுக்காக’ ‘ஆவின் பால்’கள் ஜில்லென்று வாசலில் பூத்திருக்கின்றன. ‘கௌசல்யா சுப்ரஜா‘ அரைத்தூக்கத்தில் காதினில் சுக ராகம் பாய்ச்சுகிறது.

கடற்கரையில் ‘சக்கரை‘ வி.ஐ.பி.கள், ’தொப்பை ‘தாங்கிகள் காரில் வந்து காஸ்ட்லியாக மூச்சு வாங்குகிறார்கள்.

புதுசான சூரிய ஒளியில் ‘தி ஹிந்து‘க்களும், ‘எக்ஸ்ப்ரஸினரும்‘ சுடச்சுட மொடமொடக்கிறார்கள். ரோட்டோர டீக்கடையில் ‘யுவன்ஷங்கர் ராஜா‘வுடன் அலறும் ‘ஹாரிஸ்‘. அத்தனை வாகனங்களையும் மேற்பார்வையிடும் அண்ணா மேம்பாலக் குதிரைவீரன். மெத்தப்படித்த மேதாவிகளை இரவு பகலாக பிளாட்ஃபார்மில் நிற்கவைத்து ‘சமத்துவம்‘ போதிக்கும் ‘அமெரிக்கத் தூதரகம்‘.

சாய்ந்து ஊர்ந்திடும் அரசு பஸ்களில் மூச்சுத்திணறும் நடுத்தர
வர்க்கம். அதனுள்ளே நெருக்கத்தில் ‘திருட்டு ஸ்பரிசம்‘ தேடும் ‘தகாத விரல்கள்‘.
அக்கறையாக கணவன் வயிற்றில் கையால் கொக்கி போட்டு ‘சக்கரை மொழி‘ பேசி அலுவலகம் பயணிக்கும் ‘அகல முதுகு‘ மனைவி‘மார்கள்‘.

டூ வீலரில் வித்தை காட்டுவது ‘பையனா பொண்ணா‘ என்று ‘பால் நிர்ணயம்‘ செய்வதற்குள் ‘பின் கூந்தல்‘ பறக்க ‘வ்ர்ரூம்மிடும்‘ இளசுகள். குவியல் குவியலாக அவியல் மக்களை தனக்குள் அடைகாத்திருக்கும் ‘ஸ்பென்சர் பிளாசா‘. அண்ணா சாலையில் அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்நாளைய அதே ‘பதினாலு மாடி எல்.ஐ.சி.‘ மாநகரச் சுவர்களில் அரை, முக்கால் நிர்வாணிகளாய் காட்சியளிக்கும் சினிமா ‘ஆதாம் ஏவாள்கள்‘.

இளமைப் பட்டாளத்தை தனது பெயருக்கு ‘பட்டா‘ போட்டுக்
கொண்டு குளுமையாக படம் காட்டுகிற ‘சத்யம் காம்ப்ளெக்ஸ்‘. அசுத்தமான மானிடர்களால் கறைபட்டு துக்கமாய் ஓடும் ‘கறுப்பு கூவம்‘. இஷ்டத்திற்கு சாணி கழித்து மனிதர்களுடன் சமமாக ஊடாடும் திருவல்லிக்கேணி மாடுகள். அழகான..அழுக்கான மேன்ஷன்களில் அடைந்து கிடக்கும் ஜீன்ஸ் பிரம்மச்சாரிகள். ‘குட்டி ஆஃப்கானிஸ்தானோ‘ என ஆச்சரியப்படுத்தும் கூட்டமான பர்தா பெண்கள்.

‘தென்மாவட்ட மனிதச் சங்கிலிகளை’ தினந்தோறும் நடத்துகிற
‘எழும்பூர் ரயில் நிலையம். ‘தேசிய ஒருமைப்பாட்டின் ஓடுதளமான‘ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். எத்தனையோ ‘எத்தன்களை‘ தனக்குள் பிடித்து வைத்திருந்து இன்று இடிபடப்போகும் மத்திய சிறை. ‘ஜொள் விளையாட்டு‘ மட்டுமல்ல..இளைஞர்களின் திறமையான ‘உள்விளையாட்டையும் பாரு’ என்று மகா அரங்கம் வைத்து காத்திருக்கும் ‘நேரு‘.

பல மைல்களுக்கு அப்பாலிருந்து வரும் காதலர்கள் தனது
‘முப்பாலில்‘ இருந்து மட்டுமே ‘கொட்டம்‘ அடிக்க ‘கோட்டம்‘ தந்த ‘வள்ளுவர்’. லட்சக்கணக்கானோரின் இச்சை தீர்க்க காமிரா முன் கச்சை காட்டும் கோலிவுட்
ஜிகினாப்பெண்கள். ‘இன்னோவா, ஆக்சென்ட்‘களை வழுக்க விட்டுவிட்டு ‘இன்னாபா‘ என்கிற டி.வி.எஸ். ஒல்லி வண்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்கும் டிராபிக் போலீஸ்.

‘த்தா..கீசிடுவேன்‘னு சக தமிழனையே திணறவைக்கும்
தெனாவட்டான ‘சென்னை செந்தமிழ்‘. மூன்றுமணி சுளீருக்கு பஸ் ஸ்டாப்களில் ‘ஜிலீர்‘ இளைப்பாறுதல் தரும் காலேஜ் குமரிகள். இருபது ரூபாய் தூரத்துக்கு நாப்பது ரூவா பறிக்கும் ‘சம்பல்‘ ஆட்டோக்கள். ரஜினியின் தும்மலைக்கூட எட்டுப் பக்க கவர்ஸ்டோரியாக்கி ‘எக்ஸ்க்ளூசிவ்‘ எனத் தொங்கும் வாரப்பத்திரிகைகள். சேனல் மழைக்காக டி.டி.எச். குடை பிடிக்கும் அபார்ட்மென்ட்கள்.

‘கறுப்புப்பூனைகளை‘ முன்னே ஓடவிட்டு ‘கறுப்புகளை‘
பொறுப்பாகக் காப்பாற்றப் ‘பாடுபடும்‘ அரசியல் தலைவர்கள். கொடிபிடிக்க கை தூக்கி..கோஷம் போட வாய் வளர்த்த அப்பாவி ‘தொண்டர்கள்‘. இந்த ‘கல்லாத‘ பேரையெல்லாம் பார்த்து நொந்து ‘கல்லாகிப்போன‘ ‘சிலைத் தலைவர்கள்’.

அடுத்தடுத்து புதுப்புதுசாக நுரைதள்ளும் மெரீனா அலைகள். ‘அசிங்க சங்கதி‘ நடக்கும் இடத்தை வேடிக்கை பார்ப்பதற்கான தண்டனையாக தலைகளில் எச்சம் சுமந்த சிலைகள். இருட்டிய அறையில் செய்யவேண்டியதை ‘சுண்டல் சிறுவர்களின்‘ வெறிப்புகளுக்கிடையே அரையிருட்டில் ‘கொக்கோகிக்கும்‘ சகல வயது ஆடவர்..மகளிர்.
பின்னிரவு வரை போதை மயக்கம் ஏற்றும் நட்சத்திர ஹோட்டல்கள். ஐநூறு ரூபாயில் வாய் துடைக்கும் கரன்சி சுல்தான்கள். ஆயிரக்கணக்கான ரூபாய் பில்லுக்கு அலட்சியமாய் நீட்டும் ‘கிரெடிட் கார்டர்கள்‘.

வங்கக்கடல் அலையின் தாலாட்டில் நனையாமல் ‘அணையா
விளக்கோடு‘ சதுக்கத்தில் தூங்கும் தங்கத் தமிழ்மகன் அறிஞர் அண்ணா. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று இன்றும் தமிழ்மக்கள் மதித்துத் துதித்து..நினைவிடத்தில் ‘எங்கள் தங்கமாய்‘ மங்காமல் ஜொலிக்கிற ‘புரட்சித்தலைவர்‘ எம்.ஜி.ஆர். கடலுக்கே வெளிச்சம் வீசி..தனக்குக் கீழே இருட்டாக இருக்கிற ‘கலங்கரை விளக்கம்‘.

இரவுகளில்..குடிசை, பங்களா, ப்ளாட்ஃபார்ம், கார் என ‘இட
பேதம்‘ பாராது ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த ஒரு காரியம்‘ முடித்து தூங்கிப்போகும் மானுடம்! குட்நைட் சென்னை!

‘மதுரை ஒரிஜினல் கூட்டாஞ்சோறு!’

Sunday, July 5, 2009



‘கால்மணி நேரம் சந்திச்சா போதும்..எந்த துறையிலும் கால் பதிச்சு ஜெயிச்சுரலாம்‘ங்கற நம்பிக்கையை கையில் தந்து, கைகொடுத்து அனுப்பறவர்
மதிப்பிற்குரிய மாலன் சார்!

‘சிறந்த எழுத்தாளர்..புகழ்பெற்ற பத்திரிகையாளர்..ஆழமான அரசியல் விமர்சகர்..அபாரமான ரசனையாளர்‘னு மீடியாவின் அத்தனை ‘திசைகளிலும்‘ வெளிச்சம் பாய்ச்சியவர்!

சமீபத்தில் மாலன் சாரை சந்தித்தேன். முகத்தில் அதே இளமை..பேச்சில் அதே இனிமை. மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்த மாலன் சார் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தனான‘ எனது இந்த ‘கூட்டாஞ்சோறு‘ சமர்ப்பணம்!

'படைத்தல்..காத்தல்..அழித்தல்‘னு ஏதாவதொரு வகையில் பணி செய்து ராப்பகலாக உறங்காமல் உலாவும் ‘கடவுள்களின் ஜெராக்ஸர்களான‘ மனிதர்கள். ‘வையை எனும் பொய்யாக் குலக்கொடி‘ என மெச்சிய ‘சிலப்பதிகாரத்தை‘
பொய்யாக்கிவிட்டு.. வெள்ளம் வந்தால் மட்டுமே கங்கு கரை வரை ‘நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடும் ‘வைகை‘ (நதி?) கம்மாய்.

வெள்ளையன் தூக்கிலிட்ட பின்னும் அந்த கம்பீரம் குறையாமல் இன்னும் சிலையாய் வாளேந்தி நிற்கும் ‘கட்டபொம்மன்‘. நகரத்தின் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் ‘வ்ர்ர்ரூம்ம்‘ என வந்துபோகும் ‘அரசுப் பேருந்துகள்‘. ‘அங்கிட்டும் இங்கிட்டுமாக‘ ஜனங்கள் பரபரக்கும் ‘பெரியார் பஸ் ஸ்டாண்ட்‘. தள்ளி நின்று ஒல்லியான குரலில் ‘‘ரூம் வேணுமாணே? பார்ட்டி ரெடி‘‘னு அடித்தொண்டையில் அழைப்பு விடும் ‘அவனா நீ‘க்கள். கூட்டமாக முண்டியடிக்கும் ‘பலரக‘ யூனிஃபார்ம் ‘துணி(மாணவ) மணிகள்.‘

அள்ளிச்செருகிய கூந்தல் கலையாமல்..வாயில் வெத்தலையையும்,கையில் கூடையையும் இடுக்கியபடி மிடுக்காக நடக்கும் ‘காதுவளத்த‘ பாட்டிகள். கிட்டத்திலேயே ‘சதக் சதக்‘ கொலையை ரத்தமும் மையும் உலர்வதற்கு முன்னரே முந்தித்தரும் ‘தினத்தந்தி‘ ஆபீஸ். அன்று பூத்து இன்று குலுங்கி என்றுமே வாசம் ‘கும்ம்‘மிடும் அதே வெள்ளைவெளேர் ‘மதுரை மல்லி’.

பேச்சுக்குப் பேச்சு ராகம் கலந்த ‘அண்ணே‘ போடும் ‘ஆறிலிருந்து அறுபது வயதான‘ தம்பிகள். நண்டு சிண்டுகள் முதல் பெண்டுலம் கழண்ட தொண்டு கிழம் வரை சகலருக்கும் ஒரு காலத்தில் ‘முண்டு அணிந்த குண்டு பெண்டுகளால்‘ வெள்ளித்திரையில் ‘கிளுகிளு‘ விருந்தளித்த ‘தங்க ரீகல்‘.

எதிரே..‘இதைத்தான் அமிர்தம்னாய்ங்களோ‘னு வியக்கவைத்து.. சுடச்சுட கமகமக்க தேக்கிலையில் வாங்கி ‘க்ளுக் க்ளுக்‘னு விழுங்க..தொண்டையிலேயே கரைந்து உயிர்வரை இனிக்கும் ‘திருநெல்வேலி அல்வா‘. மதுரையை பத்திரமாய் ஆண்ட ராணி மங்கம்மாவின் ‘மிச்ச நினைவுத்துணுக்காய்‘ மங்கம்மா சத்திரம்.

‘க்ளிப், கர்ச்சீப், ஜீன்ஸ், சட்டை, பேனா, டி.வி, கேசட், ஸ்டிக்கர், கடுக்காய், டி.வி.டி, பெல்ட், கத்தி, காபித்தூள்..என்ன வேணும்ணே‘னு சுத்தி நின்னு கத்திக்கூப்பிடும் டவுன்ஹால் ரோட்டில்..உதிரியாகச் சிதறி நிற்கும் ‘மினி மனித
டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்‘. ‘சொக்க‘ வைக்கும் ‘மீனாட்சி‘ கோபுரங்கள். அதன்
மாடங்களில் வாடகையின்றி குடியிருக்கும் ஜாலியில் சடசடக்கும் புறாக்கள். சரிசனமாக தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள். எப்போதுமே நெரிசலான நாலுமாசி வீதிகள்.

‘பசும்பொன்‘ நிறத்தில் பிரகாசிக்கும் கோரிப்பாளையம் ‘தேவர்‘ சிலை. நாற்புறமும் ‘டூ..த்ரீ..ஃபோர்..சிக்ஸ் வீலர்களில்‘ காதலி, மனைவி, அம்மா, பிள்ளை, பங்காளிகளுடன் சிக்னலில் சிக்கி நிக்க..நடுவே சுகமாக ‘கம்புக்கூடு‘ சொறியும் தொத்தலான போலீஸ்காரர். ‘வைகையில்‘ குளித்து வந்த ஒட்டுமொத்த மதுரைக்கே கட்டிமுடிக்கற அளவுக்கு ‘அஞ்சாநெஞ்சனின்‘ விசுவாசிகள் கட்டிவைத்திருக்கிற ‘விசுவரூப‘ விளம்பர
போர்டுகள்.

அசிட்டிக் வாசம்‘ கமழும் அரசு ராசாசி மருத்துவமனை. அழுக்காக
நோயாளிகள்..விசனத்தோடு ‘உறமுறைகள்‘..சிரிப்போடு கடக்கும் டாக்டர்கள். அந்த ‘முண்டாசு கட்டிய முறுக்கு மீசைக்காரன்‘ ஒரு காலத்தில் தன் ‘குஞ்சுகளுக்கு‘ ‘அக்னி‘ ஊட்டிய அதிசயம் நிகழ்ந்த ‘சேதுபதி மேல்நிலைப்பள்ளி‘.

பிரிட்டிஷ் காலத்துக் கம்பீரத்துடன் கலெக்டர் ஆபீஸ். சராசரி
வாழ்நாளான ஐம்பதாண்டுகளில்&முப்பது வருஷமாக வீட்டுப்பட்டா கோரி அலையும் சுத்துப்பட்டு 18 பட்டி ஆம்பளை பொம்பளைகள். ‘முதியோர் பென்ஷனுக்காக‘ பியூனையே ‘கலைக்டராக‘ நினைத்து கெஞ்சும் ரவிக்கை போடாத மூதாட்டிகள். கலெக்டர் தவிர..மற்ற மாந்தர்களையெல்லாம் ‘அற்ப புழுவே‘ன்னு பார்த்துச் செல்லும் கிளார்க்குகள்.

‘கமுக்கமாக‘ பல சம்பவங்களை புதைத்து வைத்திருக்கும் ‘தமுக்கம் மைதானம்‘. புத்தக மூட்டை சுமக்கும் வயசுல சாக்கு மூட்டை சுமந்து பேப்பர்
பொறுக்கும் ‘போஷாக்கு போதாத‘ ‘இந்தியாவின் எதிர்காலம்‘. அசையாத சைவர்களையும் அசைத்துவிடும் ‘அசைவ முனியாண்டி, தலப்பாகட்டி நாயுடு‘கள்.

ஒவ்வொரு கார்த்திகைத் திருநாளன்றும் ‘இந்து..முஸ்லிம்‘ ஒற்றுமைக்கு ஏதாவது ஊறு நேருமோ என ‘மலை உச்சியில் தீபத்தை‘ கட்டிக்கொண்டு பதற்றத்தோடு காத்திருக்கும் ‘திருப்பரங்குன்றம்‘. ஹாலிவுட் நடிகன்லேர்ந்து இன்னிக்கு காலையில் அறிமுகமான ‘புதுமுக ஜுஜுபி‘வரை அகில உலகத்துக்கே ரசிகர் மன்றம் வைத்து ‘கலை‘ வளர்க்கும் ‘ஜிகர்தண்டா‘ ரசிகர்கள். எக்கச்சக்க மேதைகளை ‘உருவாக்கி..உள்ளடக்கி’ வைத்துள்ள ‘காமராசர் பல்கலைக்கழகம்‘.

‘ஐயோ பசி‘ன்னு வந்தோர்க்கு எந்த நேரமும் ‘ஐயா..ருசியா புசி‘ன்னு படையல் போடுற ‘டண்டக்கு டண்டக்கு‘ கொத்துபரோட்டாக்கள். ‘அலாவுதீன்‘ பறக்கும் இட்லிகள். மணிரத்னம் பட ஷூட்டிங்கிற்கு தன் புராதன ‘மகாலை‘ வாடகைக்கு விடும் ‘நாயக்கர்‘. ‘கஞ்சா புகையோடு‘ சந்துகளில் அஞ்சாமல் நெளிந்து ஓடும் சைக்கிள் ரிக்ஷாக்கள். ‘பாட்ஷா‘ ஸ்பீடில் பாய்கிற ஆட்டோக்கள். ஊருக்குப் போகிற ‘அவசரத்தில்‘ ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு ‘கட்டணக் கழிப்பறை‘ முன்னே நிற்கிற ‘அவஸ்தை பயணிகள்‘.

‘தல‘யை வம்புக்கிழுத்த ‘தளபதி‘ ரசிகருக்கு கத்திக்குத்து‘னு
அசால்ட்டா அடுத்தநாள் காலைப் பேப்பருக்கு செய்தி கொடுத்துவிட்டு..மத்திய சிறையில் ‘கைதியாகவும்‘, ஆஸ்பத்திரியில் ‘அவசர வார்டிலும்‘ தூங்கும் ‘அவசர ஆவேச வாலிபர்கள்‘. ‘உலக நாயகனையே‘ ‘புன்னகை மன்னனாக்கிய‘ பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். ‘‘ம்..கொல்றாய்ங்கய்யா‘‘னு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்து அலுங்காமல் ‘தமிழ்‘ போதித்து.. நிறத்திலும், பேச்சிலும் ‘கருப்பட்டியாக‘ இனிக்கும் ‘சாலமன் பாப்பையா‘. வர்றேண்ணே!

‘ரஜினி அங்கிளும்‘..சிறுமிகளும்!

Friday, July 3, 2009





வெள்ளிநுரை விளையாடற அலையோரமா நின்னா.. நாம ‘மீனவ நண்பன்‘! கொஞ்சம் தள்ளி உழைப்பாளர் சிலையோரமா நின்னா..நாம ‘உழைப்பாளி’!
ரிப்போர்ட்டர்ங்கறதால..‘போர்ட்டர்‘ முதல் ஓட்டுநர் வரை எல்லாருமே நமக்கு நல்ல
தோஸ்த்துகதான்!

‘அம்மா மெஸ்‘ எதிரே..ஆட்டோக்காக நிக்கறேன். ‘முந்தி வர்ற இந்த மூணு சக்கர தேரெல்லாம்‘ நாலுசக்கர வாகன ரேஞ்சுக்கு ரேட் கேக்க..அஞ்சி நின்னேன். அப்போ பாத்து வந்த ஒரு ‘ஆட்டோபாந்தவன்‘..‘‘தலைவா! எப்டி க்றீங்க? ஏறி குந்துங்க. வீட்டாண்ட இட்டர்றேன்!‘‘னு பாசமா சொல்ல..‘அட..நம்மாளு‘னு ‘ஆட்டோமேட்டிக்கா‘ ஏறி உக்காந்தேன்.

அந்த ஆட்டோ டிரைவர்..மணிகண்டன். பார்வைக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும்..‘தார் பூசின தங்கக்கட்டி‘! சூப்பர் ஸ்டார் ரஜினியே இவரை கூப்பிட்டு பாராட்டியிருக்காரு! ‘நிஜ பாட்ஷா‘வை ‘சூப்பர் பாட்ஷா‘ மெச்சினதுக்கு காரணம்?

‘ஆறறிவு எந்திரன்கள்‘ பரபரப்பா ஓடிகிட்டிருக்கற சென்னை
மாநகரம்! ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிற இந்த நகரத்துல..ஆனந்தக்கண்ணீர் வழியவைக்கிற சம்பவம் அபூர்வமா நிகழும். அப்படி ஒரு சம்பவம்..சில வருஷங்களுக்குமுன்னால சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு முன்னால நடந்துருக்கு!

தி.நகர் பஸ் ஸ்டாண்ட். மனிதாபிமானத்தை ‘பான்பராக்கு‘ போல மென்னு துப்பற மனுஷங்களை பராக்கு பாத்தபடியே நின்னுகிட்டிருக்காங்க பதிமூணு வயசு சிறுமிகள் ரெண்டுபேர். ‘எப்படியாவது ரஜினி அங்கிளை நேர்ல பாத்துடணும்’ங்கற ஆசையில அன்னை, தந்தைக்குத் தெரியாம சேலத்துலேர்ந்து சென்னைக்கு பஸ் ஏறி
வந்துட்டாங்க.

அசட்டுத்துணிச்சல்ல அசலூருக்கு வந்தாச்சு. ஆனா ‘ரஜினி வீட்டுக்கு எப்படி போறது?’ வழிதெரியாம முழி பிதுங்கி நிக்கறாங்க. வழக்கம்போல வழியில வந்த ஒரு ஆட்டோ டிரைவர் இந்த சிறுமிகள்கிட்ட நைஸா பேச்சு குடுக்கறாரு. வெள்ளை மனசுப் பிள்ளைகள் ரெண்டு பேரும் விஷயத்தை சொல்லிட்டாங்க!

‘‘அடடே! நானும் ரசிகன்தாம்மா! உங்க ரெண்டுபேரையும் ரஜினி அங்கிள் வீட்டுக்கே கூட்டிட்டுப்போறேன் வாம்மா!’’னு ஆட்டோக்காரர் சொல்ல.. ‘‘சரிங்க அங்கிள்’’னு அப்பாவிப்பிள்ளைகளும் ஆட்டோல ஏறிக்கொள்ள..சீறிக்கிளம்பிச்சு ஆட்டோ! சுத்திமுத்தி நின்ன லோக்கல் ஆசாமிகளும் ‘கலி முத்திப்போச்சுமா‘னு கிலியை கிளப்பிட்டாங்க!

பாசமுள்ள வாசகர்களே! இனிமேல் நீங்க படிக்கப்
போகும் சம்பவம்..ப்ச்! என்னத்த சொல்ல? வேண்டாம்..தொடர்ந்து படிங்க!

‘விருட்‘னு வந்து நிக்கற ஆட்டோலேர்ந்து ரெண்டு சின்னப்பிள்ளைக செம குஷியோட ஓடிவர்றாங்க! இதைப்பாத்து குழம்பிப் போனாங்க போயஸ் கார்டன்ல இருக்கற ரஜினி வீட்டு செக்யூரிட்டிகள்! தொடர்ந்து ஆட்டோ டிரைவரும் ஆசையா வந்து ‘பாவம்..சின்னப்புள்ளைக ஆசைப்பட்டுச்சு! அதான் கூட்டி வந்தேன்‘‘னு ‘கைப்புள்ளத்தனமா‘ சொல்றாரு.

நொந்துபோன செக்யூரிட்டிகள் ஆட்டோ டிரைவர்கிட்ட ‘‘ஏப்பா.. அந்த புள்ளைகளுக்கு வெவரம் பத்தாது. ஆனா உனக்கோ வெவரமே கெடையாது‘‘னு திட்டிமுடிச்சாங்க. வந்த ‘ரெட்டைவால்களோ’ ‘‘ரஜினி அங்கிளை பாக்காம போக
மாட்டோம்’’னு அழுது அடம்புடிக்க..‘‘சார் படம் புடிக்க போயிருக்காருமா‘‘னு பதில்
சொல்லியும் ‘புள்ளப்பூச்சியா‘ குடைஞ்சிருக்குக புள்ளைங்க!

ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி ‘ரஜினி ஃபோட்டோ‘ல்லாம் தந்து பிள்ளைகளை சமாதானப்படுத்தி ‘ஆத்தாடி‘ன்னு பெருமூச்சு விடறதுக்குள்ள..அடுத்த பிரச்னை வந்துருச்சு! ‘இந்த வாண்டுகளை ஊருக்கு திருப்பி அனுப்பறது எப்படி?‘னு பதறுறாங்க செக்யூரிட்டிக! அந்த ஆட்டோக்காரரோ ‘‘பத்திரமா நான் அனுப்பி வெக்கிறேங்க!‘‘னு அக்கறையா சொல்றாரு.

‘‘தம்பி..உன்னை நம்பி எப்படிப்பா அனுப்பறது?’’னு செக்யூரிட்டிகள் மறுக்க..‘‘தலைவர் மேல சத்தியமா நான் பத்திரமா அனுப்பிச்சிடறேங்க!‘‘னு ஆட்டோக்காரர் கெஞ்ச..‘போயஸ் கார்டன்ல பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம்
மாதிரி‘ ஒரு ‘பாசப்போராட்டமே‘ நடக்குது. இதுக்கு நடுவே அந்த பிள்ளைககிட்ட ஒரு செக்யூரிட்டி நைஸா அட்ரஸை விசாரிக்கறாரு.

‘கிளிப்பிள்ளையா‘ பிள்ளைகள் வீட்டு அட்ரஸை ஒப்பிக்க..‘அடப்
பாவிப்பய புள்ளைகளா‘‘னு ஒரு செக்யூரிட்டி சந்தோஷத்துல அணில்பிள்ளையா குதிக்கறாரு. ஏன்னா..அதுல ஒரு புள்ளை அவரோட பொண்டாட்டி வகையறாவுல சொந்தக்காரரோட மகள்! அப்புறமென்ன..அந்த சொந்தகாரருக்கு தகவல் சொல்றாங்க. அங்கேதான்
க்ளைமாக்ஸே!

‘‘ஆமாமுங்க! முட்டாயை தின்னுகிட்டுத் திரிஞ்ச ரெண்டு
முட்டாப்பய புள்ளைகளும் ரஜினியை பாக்கணும்னு மெட்ராஸ்க்கு ஓடிவந்துருக்குன்னு
ஆட்டோக்காரத் தம்பி மணிகண்டன்ங்கறவர் ஃபோன் பண்ணி சொல்லிட்டாருங்க! அதான் அவங்க தாய்மாமன் கௌம்பி வந்துகிட்டிருக்காருங்க!’’னு ஒரு பிள்ளையோட அப்பா
சொல்ல..நம்ம ஆட்டோ மணியோட அக்கறையை பாத்து கண்கலங்கிட்டாங்க செக்யூரிட்டிகள்!

இந்த தகவல் நம்ம காதுக்கு வர..ஆட்டோ மணியை பிடிச்சு
‘அன்புள்ள் ரஜினிகாந்த்!‘னு ஒரு ஃபோட்டோ ஸ்டோரி ‘குங்குமம்‘ இதழில் எழுதினேன். அந்த கட்டுரைல ஃபைனல் டச்சா ‘இந்த சென்னைக்கு ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ என்று ஆசையோடு ஓடிவந்த அப்பாவி சிறுமிகளை பத்திரமாகப் பாதுகாத்த ‘பாட்ஷா‘ மணிகண்டனுக்கும், அவர்களை பொறுப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்த ‘ஊர்க்காவலன்‘ செக்யூரிட்டிகளுக்கும் கோடி கங்க்ராட்ஸ்!’’னு எழுதியிருந்தேன்.

கட்டுரை சூப்பர் ஸ்டாரின் பார்வைக்கு போனது. ஆட்டோ மணியின் வீடு தேடி ‘மனிதன்‘ அழைப்பு வந்தது. ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து
கால்தொட்ட மணியை ரஜினி தோள்தொட்டு பிடிச்சு ‘‘நீதான் நிஜ ரஜினி!‘‘னு கண்கசிய
பாராட்ட..கதறி அழுத மணிக்கு ‘அப்போது வழிஞ்ச கண்ணீர் அவ்வளவு இனிப்பா இருந்துச்சாம்!’

 
சுடச்சுட - by Templates para novo blogger