எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்!

Friday, December 23, 2011




’’சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்…தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்…இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உருவானவைதான்.

ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

கட்சித்தலைவராக தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றை சொல்லித்தீராது. கட்சியில் சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பேதமே பார்க்க மாட்டார். புதுக்கோட்டைப் பகுதியில் இரண்டு தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டனர். உள்ளூர் பத்திரிகையில் இது சில வரிச் செய்தியாக வெளியானது. இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனதுமே எனக்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். ‘’அவங்க ரெண்டு பேருமே அடையாளம் தெரியாத நபர்கள்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர்.’’அப்படிச் சொல்லாதீங்க. கட்சியிலேர்ந்து யாரையுமே நான் இழக்க விரும்பலை. நீங்க ஊருக்குப் போனதுமே அவங்க ரெண்டு பேரையும் திரும்பவும் கட்சியில சேர்த்துடணும். அந்தச் செய்தி அதே உள்ளூர் பேப்பர்ல வரணும், அதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க’’ என்றார் அழுத்தமாக. அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்தேன். அந்தத் தொண்டர்களுக்கோ பூரிப்பு தாங்கவில்லை. அப்புறம்தான் அவரைப் பார்த்தேன். என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சிரித்த அந்தச் சிரிப்பிருக்கிறதே…அவர்தான் எம்.ஜி.ஆர்.!

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

தகவல்: சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )
எழுத்து: எம்.பி. உதயசூரியன்

நன்றி: புதிய தலைமுறை

13 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான கட்டுரை. நெகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி எழுதுங்கள் சார், நீண்ட இடைவெளி விட்டுட்டீங்களே?

எம்.பி.உதயசூரியன் said...

நன்றி சகோதரரே. இனிமேல் தொடர்ந்து எழுதுகிறேன்...பழைய ஸ்பீடில்:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி சார், உடனடி பதிலுக்கு...... !

சித்தன்555 said...

என்னுங்ணா பழய ஸ்பீடு?ஜனுவரில ஒண்ணு பிப்ரவரில ஒண்ணுமா?

ஆர்வா said...

அப்பாடியோவ்... எத்தனை நாளைக்கு அப்புறம் உங்க எழுத்தை தரிசிக்குறோம்..ஏன் தலைவா அடிக்கடி எழுத மாட்டேங்கிறீங்க...

ஆர்வா said...

எம்ஜியார் பற்றிய அற்புதமான தகவல்கள்.. எத்தனை சுவாரஸ்யமான சம்பவங்கள். அருமையான பகிர்வு.. அதிலும் எம்ஜிஆர் வாழ்க என்ற வார்த்தைக்கு பின்னால் அவர் கூறும் காரணம் சிலிர்க்க வைக்கிறது.. நிறைய எழுதுங்கள் தலைவா... சூரியன்னா தினமும் உதிக்கணும் தலைவா..

எம்.பி.உதயசூரியன் said...

//சித்தன்555 said...
என்னுங்ணா பழய ஸ்பீடு?ஜனுவரில ஒண்ணு பிப்ரவரில ஒண்ணுமா?//

செம பஞ்ச் சகோதரா...ஸ்ஸ்ஸ்...(என் மூக்குல ரத்தம் வருதே!)

எம்.பி.உதயசூரியன் said...

// கவிதை காதலன் said...
எம்ஜிஆர் வாழ்க என்ற வார்த்தைக்கு பின்னால் அவர் கூறும் காரணம் சிலிர்க்க வைக்கிறது..//

பிரமிக்க வைக்கும் ஒப்பற்ற தலைவர் அல்லவா அவர்!

//சூரியன்னா தினமும் உதிக்கணும் தலைவா//

பாஸு...எவ்வளவு சாஃப்ட்டான சாட்டையடி! (புத்திக்கு உறைச்சிருச்சு)

jayaramprakash said...

welcome!!!ப்ளாக் லாம் ஞாபகம் இருக்கா பிரதர்.அப்படியே அந்தணன் க்கும் ப்ளாக்க ஞாபகப்படுத்துங்க.பேர்ல மட்டும் தான் அடிக்கடி,சுடச்சுட ன்னு இருக்கு.

எம்.பி.உதயசூரியன் said...

//jayaramprakash said...அப்படியே அந்தணன் க்கும் ப்ளாக்க ஞாபகப்படுத்துங்க.பேர்ல மட்டும் தான் அடிக்கடி,சுடச்சுட ன்னு இருக்கு//

குத்துங்க எஜமான் குத்துங்க...இந்த ‘ப்ளாக்கர்களே’ இப்படித்தான்!

Guru said...

அண்ணே! எம்.ஜி.ஆர் என்ற அதிசயம் கட்டுரை காலத்தை வென்ற மனிதர் என்று பறைசாற்றுகிறது. உங்க பதிவும் அதிசயமா தான் வருது. சுடச்சுட கொடுக்கலைனாலும் கொஞ்சம் ஆறி போனாலும் பரவாயில்லை பதிவு எழுதுங்கண்ணே உங்க வேலைப் பளுவுக்கு மத்தியில். நன்றி.

எம்.பி.உதயசூரியன் said...

//Guru said...அண்ணே! எம்.ஜி.ஆர் என்ற அதிசயம் கட்டுரை காலத்தை வென்ற மனிதர் என்று பறைசாற்றுகிறது. உங்க பதிவும் அதிசயமா தான் வருது.//

சகோதரா...என்ன நயமான அட்டாக்! இதுக்கு மேலயும் (சுடச்சுட எழுத)எனக்கு புத்தி வரலேன்னா...ஷேம் ஷேம்!

aanthaiyar said...

அப்பப்ப பல பேர்கிட்டே சொன்ந்து மாதிரி தொடர்ந்து எழுதுங்க் உதயா

 
சுடச்சுட - by Templates para novo blogger