ஆளில்லா தீவில் தனியே ஒரு நம்பிக்கை

Thursday, April 8, 2010



எம்.பி. உதயசூரியன்

வெகுநாளாகவே ஆழ்மனதில் மூழ்கிக் கிடந்த ஆர்வம் அது... கடல் தின்று தீர்த்த
தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள அரிச்சல்முனைக்குப் போகவேண்டும் என்று.
ராமேஸ்வரத்திலிருந்து தனி ஜீப்பில் நண்பர்களுடன் கிளம்பினோம்.
செக்போஸ்ட்டிலிருந்து நாலு ‘வீல்' பாய்ச்சலில் புழுதி கிளம்ப சீறிச் சென்றது
ஜீப்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும், அனல் மனலும் கொட்டிக்கிடக்க...
முன்னோடி வண்டிகள் ஓடிய சக்கரப்பாதையிலேயே நமது ஜீப்பும் வளைந்து,
நெளிந்து, வழியில் குழியில் துள்ளி எழும்பி சென்றபோது, கரையெங்கும்
ததும்பிய நரை நுரையை விட...மனதில் பொங்கியது பய நுரை.

கரையோர நீரில்- உறுமீனோடு, சமாதான உலகு வேண்டி ‘வெள்ளை' அலகு
நீட்டி தவமிருக்கும் கொக்குகள்...வேற்று நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து
தனுஷ்கோடிக்கு காற்று வாங்க வந்திருக்கும் ஃப்ளெமிங்கோ பறவைகள்...
அமானுஷ்ய மணற்பரப்பில் மௌனம் அனுஷ்டிக்கும் சர்ச்...விசுவிசுவென
வீசுகிற காற்றுடன் கிசுகிசுக்கிற கீற்றுக் குடிசைகள்...மனித சஞ்சாரமற்ற
மணற்பாலையில் நத்தை போல ஒத்தை ஆளாக கடந்து போகிற ஒல்லி
மனிதர்...தண்ணீரால் அழிந்து போனதை நினைவுபடுத்தும் விதமாக தண்ணீர்
கொடுத்து உபசரிக்கிற தனுஷ்கோடி என வழிநெடுக வினோதமான அனுபவங்கள்.

ஒருவழியாக (இருப்பதும் ஒரேவழிதான்) அரிச்சல்முனைக்குள் நுழைந்தோம்.
இடது கையால் இந்தியப் பெருங்கடலையும், வலது கையால் வங்காள
விரிகுடாவையும் தொட்டு விளையாடும் 'கிட்டத்தில்' அலையாடி சங்கமிக்கின்றன
இரு கடல்கள். அவை விட்டு வைத்திருக்கும் மிச்சமுள்ள மணற்திட்டில்தான்
சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி நின்று ரசிக்கிறார்கள்.

அந்த அரிச்சல்முனையில்தான் பாக்யராஜை சந்தித்தோம். இவர் அவர் அல்ல.
தன்னம்பிக்கை நட்சத்திரம். ஆளரவமற்ற அனாதித் தீவில்...நான்கு சவுக்குக்
கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,
பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என
சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ்.


+2 முடித்த இந்த இளைஞர் பெற்றோருடன் தனுஷ்கோடியில் வசிக்கிறார்.
இவரது அண்ணன் ராமேஸ்வரத்தில் கடை நடத்தி வருகிறார். ‘'மேல
படிக்கலையா பாக்யராஜ்?'' என்று கேட்டோம். ‘'+2 முடிச்சிட்டு காலேஜ்
போலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா வசதி இல்லண்ணே. வர்ற வருமானம்
வயித்துச் சாப்பாட்டுக்கும், மாத்துத் துணிக்குமே சரியா இருக்கு. இதுல
எங்கிட்டு நான் மேல படிக்கிறது? அதான் ஏதாச்சும் ஒரு தொழில் செய்யலாம்னு
இங்க கடை போட்டேன்'' என்றார்.

‘'என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க?''-
கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்...''டவுன்ல
(ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய
சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான்
ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப்
போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன
வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ
யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே'' என்றார் உற்சாகமாக.

அப்போது கடைக்கு வந்த ஒரு சுற்றுலாப் பயணி குடிக்க தண்ணீர் கேட்க,
அவரிடமிருந்த காலி பாட்டிலை வாங்கி தண்ணீர் நிரப்பித் தந்தார். ‘'எவ்ளோ
தம்பி'' என்று கேட்க...''ஃப்ரீ சார். குடிச்சுப் பாருங்க. தேனா இனிக்கும்.
ரெண்டு பக்கமும் கடலு. உப்புத்தண்ணி. ஆனா நடுவால இருக்கற மண் திட்டுல
வர்ற ஊத்துத்தண்ணி இனிப்பா இருக்கு. மனுஷ பொழப்பும் அப்படித்தாங்க
இருக்கு'' என்று ஏதோ ‘பாமர ஞானி' போல பேசுகிறார் பாக்யராஜ்.

அப்படியே நம்மைப் பார்த்து ‘'கோச்சுக்காதீங்கண்ணே. பேச்சைப் பாதியில
விட்டுட்டேன். தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க.
ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. இங்க
இருக்கற அத்தனை பொருள்களையும் பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க.
கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும்
வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது.
எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகலை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா
சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை
ஜெயிச்சிருச்சு அண்ணே'' என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு.


தீவிலிருந்து கடைசி டூரிஸ்ட்டும் கிளம்பியதை உறுதி செய்து கொண்ட பிறகே
தனது கடையை மூடுகிறார் பாக்யராஜ். கீற்றுக் கூரையை கீழே கிடத்தி.
கொண்டுவந்த அட்டைப்பெட்டிகளுக்குள் சரக்குகளை அடுக்கி எடுத்துக் கொண்டு
கடைசி ஜீப்பில் வீடு திரும்புவது இவரது வழக்கம். மழை சீஸனில் மட்டும்
இந்தக் கடை இருக்குமிடத்தில் கடல் பரவிக் கிடக்கும். ஆகவே அன்று கடை
லீவு.

‘'சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தனியாக இருக்க பயமாக இல்லையா?''-
உடன் வந்த நண்பர் கேட்டார். வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்...
‘'அண்ணே, நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே
தனுஷ்கோடிதான். எஙளுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு...வெள்ளம்தான்
தாய்ப்பாலு''.

நன்றி: புதிய தலைமுறை

15 comments:

butterfly Surya said...

தல..வெல்கம் பேக்.

Raju said...

வெல்கம் பேக்ண்ணே..!

எம்.பி.உதயசூரியன் said...

butterfly Surya said...
தல..வெல்கம் பேக்

//வண்ணத்துப்பூச்சி வரவேற்புன்னாலே
கலர்ஃபுல்தானே...இனிமே சுடச்சுட சந்திச்சுருவோம் பாஸு//

எம்.பி.உதயசூரியன் said...

♠ ராஜு ♠ said...
வெல்கம் பேக்ண்ணே..!

//சந்தோஷம். வந்துட்டேன் ராஜு.//

Ganesan said...

தன்னந்தனியே ஒரு நம்பிக்கை நட்சத்திரம், நல்லதொரு கட்டுரை.

தொடர்ந்து எழுதுங்கண்ணே.

எம்.பி.உதயசூரியன் said...

காவேரி கணேஷ் said... நல்லதொரு கட்டுரை.தொடர்ந்து எழுதுங்கண்ணே.

//காவேரியாக நடைபோடுவோம் கணேஷ்//

RRSLM said...

தல எங்க போயிருந்திங்க இவ்வளோ நாள். உங்கள ரொம்ப மிஸ் பண்ணோம்! welcom back!

வினோத் கெளதம் said...

தல வாங்க..
ரொம்ப பிசி ஆயிட்டிங்கப்போல..!!

எம்.பி.உதயசூரியன் said...

RR said...தல எங்க போயிருந்திங்க இவ்வளோ நாள். உங்கள ரொம்ப மிஸ் பண்ணோம்

//அன்பு RR...உங்களையும்,நம்ம வலைப்பூ பங்காளிகளையும் பாக்காம இருந்ததுக்கு 'நாந்தான் சாரி, எனக்குத்தான் சாரி'(தேவர் மகன் ரேவதி ஸ்டைலில் படிக்கவும்)

எம்.பி.உதயசூரியன் said...

வினோத்கெளதம் said...தல வாங்க..
ரொம்ப பிசி ஆயிட்டிங்கப்போல..!

//நலமா வினோத்? பத்திரிகைப் பணி. செம(?!) பிஸி. ஆனாலும் இனி ‘சுடச்சுட' குஷி.

பானு said...

Hello Sir,எப்படி இருக்கீங்க?புதிய தலைமுறை,உங்க family எல்லாம் நலமா?

எம்.பி.உதயசூரியன் said...

பானு said..எப்படி இருக்கீங்க?புதிய தலைமுறை,உங்க family எல்லாம் நலமா?

//பானு மேம், நீங்க, ஹீரோ சார், பிள்ளைகள் எல்லாரும் நலம்தானே? இங்கே யாவரும் நலம். எவ்ளோ காலமாச்சு உங்களோட மெயில் பார்த்து!
வேலை பிஸி. அதான் இடைவெளி. இனி ரெகுலர் ஆஜர்//

Rajan said...

வாங்க சார், எங்க ரொம்பநாளா ஆளே காணோம்?
எங்க உங்க நண்பர்?
அவரையும் காணோம்...!

எம்.பி.உதயசூரியன் said...

Rajan said...வாங்க சார், எங்க ரொம்பநாளா ஆளே காணோம்?
எங்க உங்க நண்பர்? அவரையும் காணோம்..

//அன்பு ராஜன், நலமா? பத்திரிகை வேலை. அதான் எஸ்கேப். இதோ மீண்டு(ம்) வந்துட்டோம். அந்துவும் ஆஜராகிடுவார்//

Sridhar said...

வணக்கம். இனிமேல் சுடசுட அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.

 
சுடச்சுட - by Templates para novo blogger