அண்ணனுடையான் படைக்க அஞ்சான்

Saturday, January 22, 2011






பல்லாண்டு கால பொல்லாத சோம்பேறித்தனம் அது. இவ்வாண்டு வீம்பேறி எழுந்து
அதை விரட்டி அடித்துவிட்டேன். சந்தித்ததும், சிந்தித்ததுமாக எத்தனை மனிதர்கள்...எவ்வளவு அனுபவங்கள். பத்திரிகை பரபரப்பில் ஓடிக்கொண்டே இருப்பதால் தனித்திறமை காட்டி படைத்திட நேரமில்லாமல் இருந்தது. நல்லவேளையாக...கொஞ்சகாலத்திற்கு முன் டூவீலருக்குக் குறுக்கே
கறுப்பு நாய் ஒன்று ‘வீல்’ என்று ஓடியது; அந்தர்பல்டி அடித்து நச்சென்று வீழ்ந்து சிவப்பு ரத்தம் சிந்தினான் இந்த பச்சைத்தமிழன் (கலர்ஃபுல் ரைட்டப்பு?). ஒருமாத கால ‘பெருங்காய’ ஒய்வு. என்ன செய்வான் ஒரு ஏழை இளைஞன்?

இஷ்டப்பட்டேன்...சிஸ்டம் தொட்டேன். விறைப்பான, முறைப்பான பலப்பல பிரபலங்களை பேட்டிக்காகவும், நட்புக்காகவும் சந்தித்தபோது ஏற்பட்ட ‘கலகல’ அனுபவங்களை எனது வலைப்பூவில் ‘சுடச்சுட’ பந்தி வைத்தேன். ரசித்து ருசித்த உலகத்தமிழர்கள் உச்சிமோந்து மெச்சினர். அவற்றைத் தொகுத்து ‘சாக்லெட் சந்திப்புகள்’-(பிரபலங்களுடன் ‘கலகல’
அனுபவங்கள்) என்று நூலாக்கினேன். அதேஜோரில் ’திடுக்’கிட வைக்கும் சம்பவங்களைத் தொகுத்து ‘அட!’(வித்தியாச மனிதர்கள் வியப்பான அனுபவங்கள்) என்ற தலைப்பில் இன்னொரு நூல். ரெண்டு நூல்களுக்கும் ’பிள்ளையார் சுழி’ போட்ட ’மாப்பிள்ளை’இரா.த.சக்திவேல் மூலம் ( கோச்சுக்காத மாப்ள, ‘அதை’ சொல்லல!) பாசத்திற்குரிய மீசைக்கார அண்ணன் ’நக்கீரன் கோபால்’அவர்களது பார்வைக்குப் போனது. வாயாரப் படித்து வாய்விட்டுச் சிரித்த அண்ணன் ரெண்டு புத்தகங்களையும்
’நக்கீரன் வெளியீடுகளாக’வெளியிடச் சொன்னார்.

‘ப்ரூஃப்’பார்ப்பதிலிருந்து ஃபுல்ஸ்டாப்’ போடுவதுவரை ’புல்லட் ப்ரூஃப்’ போடும் அளவிற்கு தோட்டா ஸ்பீடில் கேட்டு ‘அச்சா’ என்று பாராட்டும்படி நூலை அச்சாக்கத் துணையிருந்த ’நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்’ சகோதரர் பரமேஷ்வரனுக்கு நன்றி சொல்லித்தீராது. இதேவேளையில் இரா.த.சக்திவேல் எழுதிய ‘ச்சீய்’ கவிதைகள்,
‘பாலாவின் படைப்புலகம்’,‘புலிகேசியான புண்ணாக்கு’மற்றும் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய ‘பாரதிராஜா முதல் சசிகுமார் வரை’நூல்களும் ரெடியாக இருக்க...இவற்றோடு எனது இரு நூல்களும் அணிவகுக்க...சகாக்களோடு சேர்ந்து
ஆரம்பமானது ஒரு புதிய சகாப்தம். படைப்புலகத்திற்கு இந்த அணி ஆற்றிய தொண்டால், மூவரது ஃபோட்டோக்களையும் போட்டு புத்தகக்காட்சியில் ரெண்டாள் உசரத்திற்கு பேனர் வைத்து அசரடித்ததைக் கண்டு தமிழ்க்கன்னி பெருமகிழ்ச்சி கொண்டாள்.

அந்த பேனரை அன்புத்தம்பி அறிவழகன் ஃபோட்டோ எடுத்துத் தந்தான். அட்டகாசமாக இருந்த பேனரில் எனது ‘அட’ புத்தகத்தின் அட்டையை ஜூம் செய்து பார்த்தபோது வாடிப்போனேன். காரணம்-மண்ணு மணக்கிற சம்பவங்களும், மனிதர்களும் அடங்கிய அப்புத்தகத்தின் அட்டையில், இரு வெளிநாட்டு முகங்கள் அலங்கரித்தன. ‘அய்யோ மாப்ள, அட்டை நல்லா இருக்கு, ஆனா சப்ஜெக்ட்டுக்கு பொருத்தமா இல்லியே’என்று அலறியடித்து சக்தியிடம் சொன்னேன். கிளறிக் கிளறி அவர் விசாரிக்க கிட்டத்தட்ட கண்ணீர் சொட்டிவிட்டேன். ‘சரி, அண்ணன்கிட்ட பேசறேன்’ என்று சக்தி சொன்ன அதேநேரம்...நக்கீரன் கோபால் அண்ணன் புத்தகக் காட்சி விழாவில் இருந்தார்.

வாடிப்போன முகமும், வதங்கிப்போன மனசுமாக உதடு பிதுங்கிபோய் நானிருக்க...’பாஞ்சு நிமிஷத்தில்’சக்தி பாஞ்சு வந்தார் செல்லில். “உதயா, அண்ணன்கிட்ட சொன்னேன். அண்ணனும் பேனரைப் பாத்து அப்படியேதான் ஃபீல் பண்ணியிருக்கார். ‘புத்தகம் அந்த அட்டையோட ஸ்டாலுக்கு போகாது. புது அட்டை பிரிண்ட் பண்ணிரலாம். தம்பியை கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க’ என்ற ’அண்ணனின் குரலை’ அப்படியே சக்தி ஒலிக்க , ஏற்கனவே கசிந்த கண்ணீர் நக்கீரன் கோபால் அண்ணனின் மின்னல்வேக ஆக்‌ஷனால் இப்போது ஆனந்தக்கண்ணீராக வழிந்தது.


நம்புங்கள் நண்பர்களே, அடுத்து நடந்தது ‘அண்ணனுக்கே உரிய அதிரடி அதிசயம்’. பழைய அட்டைக்கு மாற்றாக கைவசம் தயாராக இருந்த மூன்று அட்டைப்பட டிசைன்களை பரமேஷ்வரனுக்கு அனுப்பி வைத்தேன். பட்டை கிளப்பும் பத்திரிகை, பப்ளிகேஷன் பரபரப்புகளுக்கு நடுவே ’ஒரு அட்டை மேட்டர்தானே’ என அண்ணன் சட்டை செய்யாமல்
விட்டிருக்கலாம்தான்...ஆனால் ‘அட்டைப்பட சக்கரவர்த்தி’ அவர் என்பதால், இந்த ‘அட’ அட்டையிலும் அபார அக்கறை காட்டி, அட்டகாசமான அட்டைப்படம் ஒன்றை தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பியிருக்கிறார். முதல்நாள் மதியம் அனுப்பிய அட்டை அச்சாகி, புத்தகத்துடன் பைண்டிங் ஆகி மறுநாள் மதியமே புத்தகக் காட்சியில் ’நக்கீரன் ஸ்டாலில்’
இடம்பிடித்தது என்றால், ’படைப்புகள்மீது காட்டும் அக்கறையில் அவருக்கு நிகர் அவரே’ என்பதுதான் அண்ணனுக்கான பெரும்புகழ். ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’- இது அண்ணனுக்கான பொன்மொழி. ‘அண்ணனுடையான் (புத்தகம்) படைக்க அஞ்சான்’- இது அண்ணனுக்கான என்மொழி.

ஜனவரி 13ம் தேதி. மாலை 4 மணி. சென்னை புத்தகக்காட்சி ‘நக்கீரன் ஸ்டால்’. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட நூல்களின் ஆசிரியர்களுக்கு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் பொன்னாடை போர்த்தி, படைப்புக்கான காசோலை வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி. தீட்டி வைத்த ஈட்டி போல உடற்கட்டும், போர்வாளாக மிரட்டும் மீசையும், வாயாரச் சிரிப்புமாக
நின்றிருந்தார் அண்ணன். அத்தனை படைப்பாளிகளையும் அன்போடு வரவேற்றார். ‘தம்பி உதயா’ என்று பாசத்தோடு அழைத்த அண்ணனின் வெற்றிக்கரங்களை அன்போடு பற்றி முத்தமிட்டு வணங்கினேன். ‘சாக்லெட் சந்திப்புகள்’ நூல் பற்றி இனிப்பாகப் பாராட்டி ஒரு குழந்தையைப் போல் ரசித்துச் சிரித்தார். சாதனை இயக்குநர் மகேந்திரன் தொடங்கி இரா.த.சக்திவேல்,ஆர்.எஸ்.அந்தணன் என எங்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, காசோலையும், அன்பளிப்பும் வழங்கி கௌரவித்தார் அண்ணன். ஆகமொத்தம்...அங்கு கிடைத்த அண்ணனின் பாராட்டு மூலம் தமிழ்ப்படைப்புலகை அங்குலம் அளவாவது தரம்
உயர்த்துவதே நக்கீரன் பதிப்பகத்திற்கு படைப்பாளர்கள் செய்யும் பெருமை; கடமை!

4 comments:

வினோத் கெளதம் said...

தல வாழ்த்துக்கள்.
கண்டிப்பா உங்கள் வெளியீடுகளை வாசிக்கிறேன்..
இன்னும் பல நூல்களை எழுதி தமிழ் படைப்புலகில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

BalHanuman said...

வாழ்த்துக்கள் உதயசூரியன்.

உங்கள் நூல்களை on-line -ல் வாங்க இயலுமா ?

R.Gopi said...

ஆஹா...

நெம்ப நாளைக்கு பொறவு நம்ம சிங்கம் களம் எறங்கிடுச்சுடா மாப்ள....

எலே...எட்றா வண்டிய.... போய் நம்மாள பாத்துருவோம்...

எம்.பி.உதயசூரியன் said...

//R.Gopi said...ஆஹா...நெம்ப நாளைக்கு பொறவு நம்ம சிங்கம் களம் எறங்கிடுச்சுடா மாப்ள....//

இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே சும்மா சுள்ளாப்பா இருக்கு பங்காளி!

 
சுடச்சுட - by Templates para novo blogger