குகை..புகை..யானை!

Thursday, June 25, 2009



சும்மா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது...யானை, ரயில், கடல்! இதுல ‘ரயில்ல போகும்போதே யானையை பாக்கலாம்‘னா..அது எம்மாம்பெரிய த்ரில்!

‘பாட்டியோட சுருக்குப்பை மாதிரி‘ பல சுவாரசியங்களை அடுக்கடுக்கான மடிப்புகள்ல அடக்கி வெச்சுருக்கற ஊட்டிக்கு ‘மலை ரயில்ல‘ ஒரு ஜாலி ட்ரிப் அடிச்சோம்.

''பாத்து போங்க..வழியில யானை கிராஸ் ஆனாலும் ஆகும்‘‘னு
ஏறும்போதே காத்துவாக்குல ஒரு வாக்கு காதுல விழுந்துச்சு. இதுபோதாதா? குளிரு அடிக்கிற மலையில களிறு பிளிறும் சத்தம் கேக்குதாங்கற எதிர்பார்ப்பால நமக்கும்
‘குளிர்விட்டுப்‘ போச்சு!
மேட்டுப்பாளையத்திலிருந்து படுகரெக்ட்டா காலை ஏழுமணிக்கு ‘ஜிவுக்‘னு கிளம்பிச்சு ரயில். முதல் வகுப்பு பெட்டியில் முன்வரிசை சீட்டு.. முகத்தை முத்தமிடற ‘ஜில்‘காத்துன்னு ‘ஃப்ரிஜ்ஜுக்குள் உக்கார்ந்த கூலிங் ஃபீலிங்!‘

‘ஜிகுஜிகு‘ன்னு ரயில் வர்றதை சட்டை செய்யாமல்..‘ஏதோ பெரிய சைஸ் சூட்கேஸ் வருதுங்கற மாதிரி‘ ட்ராக்குக்கு குறுக்கே கோழி முதல் மனுஷங்க வரை
ஜாலி நடை போட்டது செம தமாஷ். ‘‘யானை வரும்னு சொன்னாங்க. ஆனா மனுஷங்க
தான் கிராஸ் ஆகறாங்க‘‘னு டாப் கியர்ல எகிறியது நம்மோட ‘யானை ஆவல்‘.

கல்லார் ஸ்டாப்பிங்லேர்ந்து பற்சக்கரம் பொருத்திய ட்ராக்கில் ரயில் மலையேற தொடங்கிச்சு. முன்னால உக்காந்திருந்த ப்ரேக்ஸ்மேன்கிட்ட பேச்சு குடுத்தேன். ‘‘முப்பது வருஷமா இந்த ரயில்ல ஓடறேன்(!). எவ்வளவோ மனுஷங்களை
பாத்தாச்சு. எத்தனையோ மிருகங்களையும் பாத்தாச்சு‘‘ன்னார் கூலா.

லேசான ‘திடுக்‘கோட ‘‘மிருகங்களையா? அப்போ யானையெல்லாம் வருமா?’’னு இழுத்தேன். ‘‘ஆமாங்க. இந்த ட்ராக்ல பாக்காததா? குறுக்கும் நெடுக்குமா
யானைக அதுபாட்டுக்கு திரியும். ப்ச்..என்ன! நாமதான் கொஞ்சம் எச்சரிக்கையா
இருக்கணும்’‘னார் அசால்ட்டா.

உண்மைதான். நாலு ரயில் பெட்டிகளை உந்தித்தள்ளுற இன்ஜின் கடைசியா இருக்கு. முந்தி இருக்கற முதல் வகுப்பு பெட்டிக்கு முன்னே குந்தி இருக்கறவர் இவருதானே. திடீர்னு ‘ஹோ‘ன்னு சத்தம். என்னடான்னு பாத்தா..பட்டப்பகல்லயே
கும்மிருட்டான குகைக்குள்ள நுழைஞ்சு வெளியேறிச்சு ரயில்.

‘‘இங்க பாருங்க.. யானை பக்கத்துலதான் இருக்குபோல‘‘னு
‘கொலம்பஸ்‘ குரல் குடுத்து ‘கொல நடுங்க‘ வெச்சாரு ப்ரேக்ஸ்மேன். நாம இருந்த ஒட்டுமொத்த பெட்டியே ‘எப்டி சொல்றீங்க?‘‘னு எட்டிப்பாத்தது. ‘‘தோ தெரியுதே..‘லட்டு லட்டா‘(!?) சாணி! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் போட்டிருக்குபோல’’னு ‘லைவ் ரிப்போர்ட்‘ தர..எல்லாரையும் த்ரில் தொத்திக்கிச்சு.

இதுக்கிடையில ‘‘ஹைய்யோ..எவ்ளோ குரங்குங்க பாருங்க‘‘னு ஒரு இளம் மனைவி குஷியா தாவ..‘அட..ட்ரெயினுக்கு வெளியிலுமா’னு அந்த பொண்ணோட கணவர் கூவ..இந்த ‘பொது நக்கலை‘ கேட்டு பெட்டிக்குள்ள சிரிப்பலை. காலை ஏழு
மணிக்கே ரயில் ஏறிட்டதால எல்லாருக்குமே ஆளைக்கொல்ற பசி. ‘ஹில் க்ரூவ்‘
ஸ்டாப்பிங்ல ரயில் நின்னதுமே..அங்க கிடைச்ச வடை, பிஸ்கோத்துகளை கடிச்சபடி சுடச்சுட டீ அடிச்சோம்.

கிளம்பின ரயில் திடுதிப்புன்னு ஒரு இடத்துல ப்ரேக் அடிச்சு நின்னுச்சு. எதிரே இருட்டுக்குகை. ‘என்ன ஏது‘னு விசாரிச்சா..ட்ராக்கை ஒட்டி நின்ன ஒரு
ரயில்வே மீசை ஆசாமி ‘‘குகைக்கு அந்த பக்கம் யானை நிக்குதுப்பா‘‘னு நம்ம ப்ரேக்ஸ்மேன்கிட்ட சாவகாசமா சொன்னாரு. ‘‘என்னாது.. யானை நிக்குதா‘‘னு பயணிகள் மத்தியில கேள்வி ‘எக்கோ‘ அடிச்சபடி ‘தடக் தடக்‘னு பயம் பரவிச்சு.

‘‘அட ஆமாங்க! ட்ரெயின் சத்தம் கேட்டு யானை இப்பதான் அங்கிட்டு நகர்ந்து போயிருக்குபோல. இதோ பாருங்க..அந்த யானை போட்ட சாணியிலேர்ந்து சூடா புகை போறதை!‘‘னு ‘ஆனைத்தரமா‘ ஆசாமி சுட்டிக்காட்ட..மொத்தப்
பெட்டியே எட்டிப்பாத்து வாய்ல புகைவிட்டுச்சு.

‘எந்த நொடியில யானை வெறிகொண்டு தாக்குமோ?‘‘னு எதிரே இருக்கற இருட்டு குகை வேற ஏகத்துக்கும் பீதியை கௌப்பி ‘லப்டப்‘பை எகிறவெச்சுச்சு. இந்த கலவர நிலவரம் புரியாமல் நிறையப் பேரு குகையை ‘பேக்ரவுண்டா‘ வெச்சு போட்டோக்கள் எடுத்துகிட்டுருந்தாங்க.

அப்போ சைடிலிருந்த மரங்களோட மறைவுல ‘நம்பர் ஒன்‘ போன ஒருத்தர் ‘அடிச்சுப் பிடிச்சு‘ ஓடிவர..மொத்த பயணிகளோட அடிவயித்துலயும் ‘அடுத்துப்
போறதுக்கான‘ பயம் பரபரத்துச்சு. ‘என்னாச்சு‘‘னு விசாரிச்சா..‘‘அந்த பக்கத்துல பெரிஸ்ஸா மலைப்பாம்பு ஒண்ணுக்கு..ஸாரி..ஒண்ணு போச்சுங்க!‘‘ன்னாரு ‘பாதி‘ போன பீதியோட!

‘‘எப்போ யானை வரும்? எப்போ ட்ரெயின் கிளம்பும்?’’னு சக பயணிகளும் தங்களுக்குள்ளயே ‘பய கேள்விகளை‘ வீசி பந்து விளையாடிகிட்டிருக்க.. திடீர்னு விசில் சத்தம் கேட்டுச்சு. ‘‘ஏறுங்க சார் சீக்கிரம்! யானை கௌம்புதோ
இல்லையோ..ட்ரெயின் கௌம்பிருச்சு!‘‘ன்னாரு ப்ரேக்ஸ்மேன். அதுக்குப்பிறகு வழிநெடுக கண்ணில் தட்டுப்பட்டு தொட்டுத்தொடர்ந்தது ‘சாணி தரிசனம்‘ மட்டுமே!

இப்படியாக ஊட்டி மலை உச்சிவரை நாம பாத்து ரசிச்சது..‘எக்கச்சக்கமா பரவிக்கெடந்த யானை எச்சத்தைத்தான்! ‘அடப்பாவி மக்கா..யானையை
பாக்கவே முடியாதா‘ங்கற ஏக்கத்தோடவே ஊட்டிக்குப்போய் இறங்குனதுமே யானையைப்
பாத்தேன்.. ரயில்வே ஸ்டேஷன்ல மாட்டியிருந்த ஒரு காலண்டர்ல!

27 comments:

வினோத் கெளதம் said...

ஹா ஹா ஹா..நல்ல தமாசு..
ஊட்டிக்கு Location பார்க்க தானே போனிங்க..

எம்.பி.உதயசூரியன் said...

//வினோத்கெளதம் said.. ஹா ஹா .. நல்ல தமாசு. ஊட்டிக்கு Location பார்க்க தானே போனிங்க..//

vocation ப்ளஸ் Location கலந்த ஜாலி ட்ரிப் வினோத்! இன்னும் மனசுல ‘மலைகளின் ராணி’யோட குளிர்ச்சி மலர்ச்சியா இருக்கு!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

க.கவிஞரே, எல்லோருக்கும் இப்படித்தான் சொல்லுவாங்களோ? ஒருவேளை 'அவரு' எல்லா யானைகளையும் சுட்டு தின்னுபுட்டாரோ ? ஆனால் பஸ்சு போகும் தார் ரோட்டில் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நானே பாத்திருக்கேன். ( அது என்ன? ' யான வைத்துல திருவோடு செஞ்சி ',... மறக்க முடியல சாமி! )

சென்ஷி said...

//.‘‘அந்த பக்கத்துல பெரிஸ்ஸா மலைப்பாம்பு ஒண்ணுக்கு..ஸாரி..ஒண்ணு போச்சுங்க!‘‘ன்னாரு //

ஹைய்ய்யோ.. ஹைய்யோ.. சிரிச்சு மாளலை!!! :)

Chandru said...

இப்படி தாங்க ஒரு தடவ நாங்க Corbett National Park போனோம், ஒருத்தன் ஜீப்'ல இதா 'புலி வருது புலி வருது' அப்படின்னு சொல்லி 4 மணி நேரம் சுத்தி விட்டுடான், கடைசி வரைக்கும் புலியையும் பாக்கல அது போட்ட கக்கவையும் பாக்கல. ஆனா கொஞ்சம் மான் மட்டும் பாத்தோம். அப்புறம் ஒரு பைதான்.
உள்ள சுத்தி பாத்தா தான் தெரியுது டீ கடை ஸ்நக்ஸ் குளிர் பானங்கள் கடை எல்லாம் போட்டு இருக்கானுங்க, ஏகப்பட்ட வண்டிங்க, இன்னும் கொஞ்சம் நாள்'ல டிராபிக் சிக்னல் லைட் எல்லாம் போட்டுடுவாங்க போல, அப்புறம் எங்க பொய் பாக்குறது புலி சிங்கம் எல்லாம். உள்ள இருக்குற அதிகாரிங்க எல்லாம் டெய்லி மான் கறிதான் சாப்பிடுறாங்களாம். வாழ்க நேஷனல் பார்க்.

Bhuvanesh said...

As usual,செம Flow:)

Nags said...

விளையாடுறீங்க பாஸ் .. கலக்கல்

Sridhar said...

கலக்கல் சார் அடுத்தது கேரளா விஜயமா?

ரவிஷா said...

அதுங்க இடத்துலதான் இப்போ நம்ம மக்கள் ஆக்ரமிச்சதுனால சிட்டிலதான் உலாத்துதுங்களாம்! நீங்க வேற அதுங்கள காட்டுல போய் தேடியிருக்கீங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//தமிழ்நாட்டுத்தமிழன் said... பஸ்சு போகும் தார் ரோட்டில் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நானே பாத்திருக்கேன்//

ஆனை மேல ஆணையா நம்பறேன் சார்!

எம்.பி.உதயசூரியன் said...

//சென்ஷி said... //.‘‘அந்த பக்கத்துல பெரிஸ்ஸா மலைப்பாம்பு ஒண்ணுக்கு..ஸாரி..ஒண்ணு போச்சுங்க!‘‘ன்னாரு // ஹைய்யோ.. சிரிச்சு மாளலை!!!

‘நம்பர் ஒன்’ காமெடிங்கறது இதுதானா தலைவா?

எம்.பி.உதயசூரியன் said...

//Chandru said... இதா 'புலி வருது புலி வருது' அப்படின்னு சொல்லி 4 மணி நேரம் சுத்தி விட்டுடான், கடைசி வரைக்கும் புலியையும் பாக்கல அது போட்ட கக்கவையும் பாக்கல.//

‘புலி..கிலி..பலி’ன்னு ஒரு மினி பதிவே போட்டுட்டீங்களே பாஸ்!
இன்ட்ரஸ்டிங்!

எம்.பி.உதயசூரியன் said...

// Bhuvanesh said... As usual, செம Flow:)// @ // Nags said... விளையாடுறீங்க பாஸ் .. கலக்கல்//

யானை மேட்டருக்கு ‘அங்குசம்’ சைஸ்ல பாராட்டா?

செந்தில்குமார் said...

தல,

உங்க 'யானை'ப்பசிக்கு தீர்வு வேணும்னா ஒரு வாட்டி 'டாப் ஸ்லிப்' போயிட்டுவாங்களேன். ட்ரெக்கிங் போனீங்கன்னா 'பிடி'யை குளோசப்ல பிடிக்கலாம் !!

எம்.பி.உதயசூரியன் said...

//Sridhar said... கலக்கல் சார் அடுத்தது கேரளா விஜயமா?//

ஸ்ரீதர் ஏட்டா! ’கள்ளும் லொள்ளும் மீனும் ஞானும்..பின்ன நிங்களும்’னு ஒரு வல்லிய டைட்டில் ரெடியாக்கும்!

எம்.பி.உதயசூரியன் said...

//ரவிஷா said... அதுங்க இடத்துலதான் இப்போ நம்ம மக்கள் ஆக்ரமிச்சதுனால சிட்டிலதான் உலாத்துதுங்களாம்!//

பாவம்.. நாட்டுக்குள்ள வர்றதால அதுக்கு ‘மதம்’ வேற பிடிச்சுத் தொலையுது!

உடன்பிறப்பு said...

உங்கள் பதிவுகளை பற்றி சொல்ல தேவை இல்லை. வழக்கம் போல் சூப்பர். கிரீடம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

ஊட்டிக்கு எதுக்கு..?

டிஸ்கஷனா..?

ஓகே.. என்ஜாய்..!

எம்.பி.உதயசூரியன் said...

//செந்தில்குமார் said... தல, ட்ரெக்கிங் போனீங்கன்னா 'பிடி'யை குளோசப்ல பிடிக்கலாம் !!//

ஆஹா..தமிழ் ‘மலையேறி’ விளையாடுதே! செந்திலுக்கு ’வாரணம் ஆயிரம்’ வரவழைத்து தோரணம் கட்டலாம்!

எம்.பி.உதயசூரியன் said...

//உடன்பிறப்பு said... உங்கள் பதிவுகளை பற்றி சொல்ல தேவை இல்லை. வழக்கம் போல் சூப்பர்.//

உடன்பிறப்பே..நீங்க இப்படிச் சொன்னதே பெருமையா இருக்கு!

எம்.பி.உதயசூரியன் said...

// உண்மைத்தமிழன் said... ஊட்டிக்கு எதுக்கு..? டிஸ்கஷனா..? ஓகே.. என்ஜாய்..!//

தமிழன்..கேள்வி, பதில், வாழ்த்துன்னு மூணு மேட்டரையும் நீங்களே சொல்லிட்டீங்க! நான் ‘கப்சிப்’.

பானு said...

"சும்மா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது...யானை, ரயில், கடல்!" True Sir.

Cliffnabird said...

அலுவலகத்தில் படிக்கையில், கடந்து செல்லும் சக பணியாளர்களுக்கு ஏற்ப சுருக்கி கீழே வைத்து (minimize nu type pandradhu evlo kastama irukku...ssshhabbaa...mudiyala) /க்ளோஸ் செய்து மீண்டும் திறந்து விட்ட இடத்திலிருந்து படிக்கையில், இதுவரை படித்திருந்ததை மறந்துவிடும் எனக்கு....முற்றிலும் மாறாக அருமையான உங்கள் வார்த்தை பிர யோகங்கள் அது என்னுடைய குறைமட்டுமன்று எழுதுபவர் நடையையும் பொறுத்தது என்று புரியவைத்தது...

அருமையான நடை!

எம்.பி.உதயசூரியன் said...

//பானு said... "சும்மா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது... யானை, ரயில், கடல்!" True Sir.//

சாருக்கும், பிள்ளைகளுக்கும் இந்த கதையை சொன்னீங்களா மேடம்?

எம்.பி.உதயசூரியன் said...

//Cliffnabird said...அருமையான நடை!//

நண்பா..யானை நடையைத்தானே சொல்றீங்க! ( உங்களோட ‘அப்பாவின் கடிதம்’ கவிதை வலியும்..அற்புதமான அந்த புகைப்படத்தின் கண்ணீர் துளியும் என்னை விசும்ப வைத்துவிட்டது!)

Anonymous said...

எனது பதிவு தளத்திற்கு வந்ததுக்கு நன்றி அண்ணே... உங்களோட பின்னூட்டம் என் எழுத்துக்கு ரொம்ப எனர்ஜியா இருக்கும்.

அன்புடன்,
சக்திவேல்

Dinesh C said...

உங்க எழுத்துக்கள் அழகு :)
தமிழை இவ்வளவு அழகா எழுதி, அதை வலைப்பூக்களில் மலர செய்யும் ஆட்கள் இருப்பது தமிழின் பெருமை :)

பதிவுகளில் வார்த்தை கோர்வையும் சிலேடைகளும் நன்று :) இத பார்த்து நானும் எழுதறேன் அப்படின்னு சுத்திட்டு இருக்கும் பல நபர்கள் (நான் உட்பட) பயன் அடைவார்கள் :)

Regular Reader தான்! இன்னைக்கு தான் மறுமொழி!

 
சுடச்சுட - by Templates para novo blogger